SHARE

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக கைதான கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப்படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர்   கருணா குழு உறுப்பினர்கள் என சந்தேகப்படும் சிலரால்  கடத்திக் கொல்லப்பட்ட நிலையில் முனைக்காடு மையானத்தில் புதைக்கப்பட்டதாக அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தெரிய வந்தது.

இவ்விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்  பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன்   மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா  லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை ஓட்டமாவடி  களுவாஞ்சிக்குடி  கல்லடி ஆகிய இடங்களில் வைத்து கடந்த மார்ச்  மாதம்  கைது செய்திருந்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக தெரியவந்தது.

இதனடிப்படையில் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு  மட்டக்களப்பு நீதவான்   ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் நேற்று (11)    பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது சந்தேக நபர்களில் ஒருவரான லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் அவ்விடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நீதிவானின் நீண்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்படவில்லை.

இந்நிலையில் தற்காலிகமாக குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இத் தற்கொலை முயற்சி நேற்று இரவு  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் கடுமயாக உடல் நலக்குறைபாட்டிற்கு உள்ளான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email