SHARE

தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், கொலை அச்சுறுத்தல் காரணமாக தான் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தான் இருக்கும் இடத்தை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) செயற்பட்டு வருகின்றது.

டெலோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் கூட்டமைப்பு மற்றும் ரெலோ அமைப்பு ஆகியவற்றின் நிலைப்பாடுகளை கருத்தில் எடுக்காது, தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தி என்ற அமைப்பின் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக திடீரென அறிவித்து நேற்று கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடன் தேர்தல் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், வேட்புமனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து கொலை அச்சுறுத்தல் தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கட்சி தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டிருக்கும் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக கட்சி ஆராய்ந்து வருவதாகவும் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம், கட்சி அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறிய பின்னரே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியதாக தெரிவித்தார்.

மேலும், எவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email