SHARE

தமிழர்கள், தாங்களே ஒரு தேசிய கீதத்தை உருவாக்கி  இசைக்கட்டுமென தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கிறதா என்று தெரியவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

கைதடியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  அவர் கூறுகையில், “தேசிய கீதத்தை நாங்கள் பாடத்தேவையில்லை என்று அவர்கள் எங்களுக்குச் சொல்லியதை நல்ல எண்ணத்தோடு எடுத்துக்கொள்வோம்.  வியாக்கியானமும் தேவையில்லை.

ஒருவேளை அவர்கள்,  சிறுபான்மையினத்தினர் தாங்களே ஒரு தேசிய கீதத்தை உருவாக்கி  இசைக்கட்டுமென எதிர்பார்க்கிறார்களோ  என்று தெரியவில்லை. எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு என்ன செய்யப்போகின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வடக்கு கிழக்கில் சிங்களத்தில் தான் படிக்க வேண்டும் என்றால் அதனை அதிபர்கள் ஊக்குவிக்கக் கூடாது. வடக்கு கிழக்கிக் அத்தனை அதிபர்களும் அரச திணைக்களங்களும் அடிமைகள் ஆகக் கூடாது. எங்களுடைய முழு உரிமையைப் பறிக்கும் செயல் இந்த தேசிய கீதப் பிரச்சினையாகும்.

ஒரு தேசிய இனம் தான் இருக்கின்றது. அதற்கு கட்டுப்படுங்கள் என்று சொல்கிறார்கள். இதனூடாக  நாங்கள்  அடிமைகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

எனவே இவ்விடயத்தில் நாங்கள் இசைந்து போகக் கூடாது. முன்னர் நடந்த விடயங்கள் எல்லாவற்றையும் இந்த அரசாங்கம் மீண்டும் தொடங்கி வைக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email