SHARE

யாழ்ப்பாணம் – மத்திய பேருந்து நிலையம் முன்பாக உள்ள வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு, அதன் மீது மலர் சூட்டி கட்டப்பட்டிருந்த பௌத்த கொடி ஒன்று இன்று (14) மாலை அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இளைஞர்களாலேயே குறித்த சர்ச்சைக்குரிய பௌத்த கொடி அகற்றப்பட்டுள்ளது.

இது குறித்து அருகில் இருந்த கடை உரிமையாளர்கள், “இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள் கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ள இது நேற்று நள்ளிரவு  நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டது” என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன், “சிங்கள பௌத்த பேரினவாதம் எமது பூர்வீக நிலங்களை மெல்ல மெல்ல விழுங்க முயற்சிக்கின்றது. அதனை நாம் தமிழ்த்தேசமாக ஒன்று திரண்டு நிறுத்த வேண்டும்.

நாம் என்ன வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்கின்ற மாவோவின் கருத்துப்படி. சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களுடைய தமிழ் தேசத்து நிலங்களினை இவ்வகையான சின்னங்களை நிறுவி மெல்ல மெல்ல பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தி பறித்தெடுகின்ற முயற்சியாகும் என தெரிவித்தார்.


Print Friendly, PDF & Email