SHARE

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும், “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.நாவற்குழியில் இன்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இந்த அரும்பொருள் காட்சியகம் திறக்கப்பட்டது.

தமிழ் பண்பாடுகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்று கோமாதா வழிபாடு, விநாயகர் வழிபாட்டுடன் அரும்பொருள் காட்சியகத்தின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.,சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் நுழைவாயிலை நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்துவைத்தார்.

தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கலாநிதிகள் திறந்துவைத்தனர்.

அரும் பொருள்காட்சியகத்தின் முதலாவது தளம் அபிராமி கையிலாயபிள்ளை அம்மையாரால் திறந்து வைக்கப்பட்டது.
கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியை அமரர் பகவதிதேவி கந்தப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரது உறவுகளால் வழங்கப்பட்ட நிதியுதவியில் இரண்டாவது தளம் அமைக்கப்பட்டதால், அவரது மாணவர் ஆறுமுகம் சிறிஸ்கந்தமூர்த்தி அதனைத் திறந்துவைத்தார்.

கந்தர்மடத்தைச் சேர்ந்த அமரர் செல்வி வைத்தியலிங்கம் நினைவாக அமைக்கப்பட்ட மூன்றாவது தளத்தை சட்டத்தரணி அமரர் நீலகண்டனின் துணைவியார் திறந்துவைத்தார்.

தமிழ் மன்னர்களின் சிலைகளை அமைக்க நிதியுதவியளித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரின் பழைய மாணவனும் மருத்துவ நிபுணருமான நிமலன் மகேசனின் நினைவுப் பதிவை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் பஞ்சலிங்கம் திரைநீக்கம் செய்தார்.

சர்வமதத் தலைவர்கள், கற்றறிந்தவர்கள் எனப் பெருந்திரளானோர் இவ் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜ, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், சரவணபவன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், வடக்கு மாகாண ஆளுநர் சார்ல்ஸ், வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பல்கலை பேராசிரியர்கள் உள்ளடங்கலாக பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email