SHARE

காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி கசூரினா கடற்கரை (பீச்) பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

நாட்டில் கொரோனோ அச்சம் முழுமையாக நீங்காத நிலையில், காரைநகர் பிரதேச சபையினரால் கசூரினா பீச் மக்கள் பாவனைக்காக திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கு காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கடற்படையினருக்கு கொரோனோ தொற்று அபாயம் இருப்பதனாலும், தமிழகத்தில் இருந்து மக்கள் கடலில் ஊடாக உட்பிரவேசிக்கலாம் போன்ற நிலைமைகள் இருப்பதனால் அனுமதிக்க மறுப்பு தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர், தமது சபைக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் கசூரினா பீச்ச திறக்க விடாது சுகாதார வைத்திய அதிகாரி இழுத்தடிப்பு செய்து வருவதனால் எமது சபை பெரும் வருமானத்தை இழந்து வருகின்றது. என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) முதல் தவிசாளர் கடற்படை ஊடாக சுற்றுலா துறையின் ஆலோசனையை பெற்று கசூரினா பீச்சினை திறந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Print Friendly, PDF & Email