SHARE

“சைவர்கள் எவரும் சுமந்திரனுக்கு வாக்களிக்கவேண்டாம். சுமந்திரனுக்கு எதிராக 100 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்” என மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

மறவன்புலவுப் பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவரான க.சச்சிதானந்தத்தினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றுமுன்தினம் (26) இரவு ஒட்டப்பட்டிருந்தன.

தேர்தல் விதிமுறைகளை மீறி ஆலயத்தின் கருவறைக்குள் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்ததினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸாரினால் குறித்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சச்சிதானந்தம்,

சைவசமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் சுமந்திரன் ஈடுபடுகின்றார். சைவக் கோயில்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முகமாக அவருடைய தேர்தல் சுவரொட்டிகளை சைவக் கோயில்களில் கருவறைக்குள் ஒட்டியிருக்கின்றார். கருவறை என்பது சைவர்களுடைய நம்பிக்கைக்குரிய இடம்.

கருவறையிலேயே சுமந்திரன் தன்னுடைய தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் சைவ சமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார். தேர்தல் விதிமுறைகளையும் மீறி மக்களுடைய நம்பிக்கையையும்  உடைத்து கிறிஸ்தவர்களுடைய மேலாதிக்கத்தை உயர்த்தும் முகமாக கோயில் கருவறையிலேயே  தேர்தல் சுவரொட்டிகளை 26ஆம் திகதி இரவு ஒட்டியிருக்கிறார். இதை வன்மையாகக் கண்டிப்பதோடு அவரிடம் நூறு கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்.

அத்துடன், இந்த வீட்டுக்குப் பொறுப்பான கட்சித் தலைவருக்கு எதிராகவும், சாவகச்சேரி தொகுதி வீட்டுக்குப் பொறுப்பானவருக்கு எதிராகவும்  வழக்குப்  பதிவு செய்யவுள்ளேன். எனினும் இன்று (நேற்று-27) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன். அத்துடன், தேர்தல் திணைக்களத்திலும் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை நான் பதிவு செய்யவுள்ளேன்.

எனவே, சைவர்கள் எவரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமென நான்  கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

Print Friendly, PDF & Email