யாழ். உரும்பிராய்ப் பகுதியில் வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி – வாளைக் காட்டி – அச்சுறுத்தி நகைகள் திருடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், உரும்பிராய் மேற்கு சோளம் தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டின் பின்பக்கமாகச் சென்ற நபர்கள் வீட்டின் கதவை உடைக்க முற்பட்டுள்ளனர். இதன்போது சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் வெளியில் வந்துள்ளார். இதன்போது அவரைக் கம்பியால் தாக்கிவிட்டு, வீட்டில் இருந்தவர்களை வாளைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன், வீட்டில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், குறித்த வீட்டில் இருந்தவர்களின் அவலக் குரல் கேட்டு, அயலவர்கள் ஓடி வந்தபோதும் குறித்த திருட்டுக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.