SHARE

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் போராட்டம் இடம்பெறும் நேரத்தில் ஒரு மணிநேர கதவடைப்பு செய்து தமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த அமைப்பினால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறிப்பிடுகையில், “பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை முன்னெடுத்துவந்த எமது தாய்மார், இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று அறியாதவர்களாய் பல தாய்மார் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளோம். அதனாலேயே நாங்கள் சர்வதேசத்தை நம்பியுள்ளோம். சர்வதேசமே இலங்கை அரசாங்கத்தின் மீது விசாரணை மேற்கொண்டு எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.

சர்வதேசத்திடம் நீதி கேட்பதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த போராட்டங்கள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் திருகோணமலையிலும் இடம்பெறவுள்ளன.

குறித்த போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் வர்த்தகர்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக காலை 9.30 மணிக்கு பேரணி ஆரம்பமாகி பேருந்து நிலையம் வரை சென்று முடிவடையவுள்ளது. குறித்த நேரத்தில் ஒரு மணிநேரம் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அழைக்கின்றோம்”  என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email