SHARE

உலகளாவிய ரீதியில் இதுவரையில் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலில் இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

சுதந்திர பத்திரிகையாளர் கூட்டணி இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நினைவுகூரப்பட்ட நிலையில், அதனை முன்னிட்டு (10 Most Urgent) என்ற தலைப்பில் பத்திரிகைச் சுதந்திரம் முற்றிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு அடக்குமுறையை அனுபவித்துவரும் 10 ஊடகவியலாளர்களை உள்ளடக்கி இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அண்மைய தரவுகளின்படி உலகளாவிய ரீதியில் 64 ஊடகவியலாளர்கள் காணாமல்போயுள்ளனர்.

இந்த நிலையில் சுதந்திர பத்திரிகையாளர் கூட்டணியினால் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி காணாமல்போன இலங்கையைத் தளமாகக்கொண்டு பணியாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

எக்னெலிகொட தொடர்பாக தெரிவித்துள்ள சுதந்திர பத்திரிகையாளர் கூட்டணி, ‘இலங்கையின் இணைய ஊடக செய்திச்சேவையைச் சேர்ந்த ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட சுமார் பத்தரை வருடங்களுக்கு முன்னர் அவரது வீட்டிலிருந்து கிளம்பியபோதே அவரது மனைவியும் இரண்டு இளம் பிள்ளைகளும் அவரைக் கடைசியாகப் பார்த்திருக்கின்றார்கள்.

2010 ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தமைக்காக அவர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தார்.

எக்னெலிகொட கடத்தப்பட்டமையுடன் 7 பேர் தொடர்புபட்டிருப்பதாகக் கடந்த வருடம் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றஞ்சாட்டியிருந்ததுடன், அதுகுறித்த விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

எனினும் கடந்த 6 மாத காலத்தில் இந்த வழக்கின் சாட்சிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாகத் தெரிவித்திருக்கும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதுமான அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்பு என்பன அதிகரித்திருப்பதாகவும் விசனம் வெளியிட்டிருக்கிறார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏழு மாதங்களுக்கு முன்பு பெருவில் காணாமல்போயிருந்த டேய்ஸி லிசெத் மினா ஹுவாமன் (Daysi Lizeth Mina Huamán ) என்பவரின் பெயர் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருவின் காங்கிரஸ் தேர்தல்களில் வாக்களித்த பின்னர் தனது காதலனைச் சந்திக்கச் செல்லும் வழியில், மத்திய நகரமான அயாகுச்சோவில் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரான கேபிள் VRAEM இற்காக ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தபின், ஜனவரி 26 ஆம் திகதி டெய்சி லிசெத் மினா ஹுவாமன் காணாமால் போயிருந்தார்.

மேலும், சிரியாவில் ஐந்தரை ஆண்டுக்கு முன்பு சிறையில் இருந்து கடத்தப்பட்டிருந்த ஃபர்ஹாத் ஹமோ (Farhad Hamo) என்பவரின் பெயர் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்,  மார்ச் 2015இல் ரக்காவின் சிறையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email