SHARE

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று (01) நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 14 பேர் கைது செய்யப்பட்டுள்னர். அதேவேளை, யானைத் தந்தம், வாள், கெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றுக் காலை திடீரென இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் யானைத் தந்தம் ஒன்றை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரும், கூரிய வாள் ஒன்றை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவருமாக மொத்தமாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Print Friendly, PDF & Email