SHARE

“யாழில் பொது இடங்கள் மற்றும் வெற்றுக் காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள்” என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர்  வைத்தியர் ஆர்.கேசவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முழு வட மாகாணத்திலும் 3 வருடங்களாக இந்த கழிவகற்றல் விடயம் தொடர்பில் பேசிவருகின்றோம். ஆரம்பத்தில் இருந்து இந்த விடயங்களை மீளப் பார்க்க முடியாது. ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலகத்தினர் உள்ளூராட்சி சபையினர் இணைந்து தங்களுடைய பிரதேசங்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதேபோல் நல்லூர், கோப்பாய் போன்ற பிரதேசங்களில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கத்  தயாராக வேண்டும்.

எங்கிருந்து குப்பைகள் கொட்டப்படுகின்றன என்பதனை முதலில் அடையாளப்படுத்துங்கள். அதனை அடையாளம் கண்டு விட்டு உடனடியாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் அவர்களைக் கைது செய்யுங்கள.

பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பார்கள். யார் யார் குப்பை கொட்டுகிறார்கள்? எந்தெந்த இடங்களில் குப்பை கொட்டப்படுகிறது என்பது அனைவருக்கும் விளங்கும்.

 ஒவ்வொரு கிழமையிலும் நீங்கள் இதனை செய்ய வேண்டும். மூன்று நாட்கள் இதற்காக ஒதுக்குங்கள். கட்டாயமாக இதனைக் கட்டுப்படுத்த முடியும். பொலித்தின் மற்றும்  இதர கழிவுகளால் மட்டும்தான் டெங்கு பரவக் கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது. ஒவ்வொரு கிழமையும் இந்த வேலைத் திட்டத்தை  மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிழமையும் இதைச் செய்வதன் மூலம்  கட்டுப்படுத்த முடியும் 

.இவ் வருடம் நாங்கள் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். யாழ். மாவட்டம் டெங்கு சிவப்பு எச்சரிக்கையில் உள்வாங்கப்படவில்லை. அந்த நிலைமையை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த மாதங்களில் எமக்கு சிகப்பு எச்சரிக்கை வந்துவிடும். எனினும் இவ்வருடம்  நமது மாவட்டம் அதற்குள் உள்வாங்கப்படவில்லை.

அதற்கு   கொரோனா தாக்கம் இருந்ததுதான்  காரணம். கடந்த வருடம் பல்லாயிரக்கணக்கான தொற்று நுளம்புகள் பரவியதன் காரணமாக  அதிக அளவில் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
முக்கியமாக ஒன்றை கடைப்பிடிக்க வேண்டும். உள்ளூராட்சி சபைகள் ஒவ்வொரு கிழமையும் கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கெதிராக உடனடியாக அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கைது நடவடிக்கை எடுங்கள்.

அதேபோல் இந்த விடயங்களை ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதன் மூலம்  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்
 
குறிப்பாக கொரோனா காலத்தில் நாங்கள் இரண்டு விதமான கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றினோம். சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் மூலம் எமது கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொண்டோம். அதில் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்குச் சட்டம் நமக்கு முழுமையாக வெற்றியைத் தந்தது.

அதேவேளை,சுகாதாரப் பிரிவினரால் முகக் கவசங்களை அணியுங்கள், சமூக இடைவெளியைப் பேணுங்கள் என வலியுறுத்தி அதனை நடைமுறைப்படுத்தினோம்.

ஆனால், இன்று மக்கள் மத்தியில் சமூக இடைவெளி பேணப்படுகின்றதா? அல்லது எங்கேயாவது மக்கள் மாஸ்க் அணிந்து வருகிறார்களா  என்பதை நீங்கள் அவதானிக்க முடியும்.

டெங்குக் கட்டுப்பாட்டு விடயத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் இணைந்து எதிர்வரும் காலங்களில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த  வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

Print Friendly, PDF & Email