SHARE

சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிசா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்குள்ளாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் ஐந்து பேர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள், தரிசா பஸ்டியன் தனது எழுத்துக்களிற்காகவும் இலங்கையில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காகவும் இலக்கு வைக்கப்படுகின்றார் என தெரிவித்துள்ளனர்.

தரிசா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும், அவரது கணிணி கைப்பற்றப்பட்டு அவரதுதொலைபேசி ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதும் அவரது தகவல் மூலங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என ஐ.நா. அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் ஒரு அனுபவமிக்க ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை பாதுகாவலர் ஆவார், அவர் முன்னர் சண்டே ஒப்சர்வரின் தலைமை ஆசிரியராகவும், நியூயோர்க் டைம்ஸின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.

சட்டவிரோத கொலைகள், அரசியல் ஊழல் மற்றும் தண்டனையற்ற பிரச்சினைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து அவர் எழுதியுள்ளார்.

2009 ஆம் ஆண்டில் தி சண்டே லீடர் பத்திரிக்கையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் 2008-2009 காலப்பகுதியில் இலங்கை கடற்படை ஊழியர்களால் 11 இளைஞர்களை கடத்தி கொலை செய்தமை பற்றியும் அவர் செய்தி வெளியிட்டார்.

எனவே இதன் காரணமாக பொதுமக்கள் நலன் மற்றும் மனித உரிமை தொடர்பான விடயங்கள் குறித்து எழுதுவதை ஏனைய ஊடகவியலாளர் கைவிடலாம் எனவும் ஐ.நா.வின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் அவரது பணிக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்திலானதாகயிருக்கலாம் என நாங்கள் கவலையடைந்துள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தரிசா பஸ்டியன் அரசியல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிடுவதை எழுதுவதை தடுப்பதற்கான முயற்சியாக இதுயிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email