SHARE

காந்திய தேசத்திற்கே காந்தியம் கற்றுக்கொடுத்த மறவன் அவன்: பரம்பரைகள் கடந்தாலும் பார்திபனின் 12 நாட்கள் என்றும் அழியாத் தடமே”

யாழ். ஊரெழுவில் இரரசையா தம்பதியினருக்கு 1963 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி பிறந்தவர் தான் பார்த்தீபன். தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடை விடுதலை வேட்கையில் ஆயுதங்களை கையிலெடுத்தனர் இளைஞர்கள்.

அந்த இளைஞர்களில் வித்தியாசமான புரட்சி சிந்தனையாளனாய் திகழ்ந்தவர் பார்த்தீபன். தன்னை விடுதலைப்புலிகளின் அமைப்பில் ஈடுபடுத்தக் கொண்டவர், இந்திய அமைதிப்படைகளினதும், சிறிலங்கா சிங்களப்படைகளினதும் கோரத்திற்கு எதிராகவும், தயாகத்தின் எதிர்காலத்திற்காகவும் அஹிம்சை போராட்டத்தின் உச்சத்தினை வெளிப்படுத்தியவர்.

ஆம், 1987,செப்டம்பர் 15 ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26 1987இல் வீரமரணம் அடைந்தர் லெப்டிணன் கேணல் திலீபன். காந்திய தேசத்திற்கே காந்தியம் கற்றுக்கொடுத்தவர் இந்த தியாகி. வீர மரணம் எய்தி 33ஆண்டுகளாகின்றபோதும் இந்த தியாகின் இலக்கு இன்னமும் எட்டாக்கனியாகவே இருக்கின்றமை தமிழர்களின் துர்ப்பாக்கியமே.

ஐந்து அம்சக்கோரிக்கைகள்
1).மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2).சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3).அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4).ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5).தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

விடுதலை வேள்வியின்

முதல் நாள் (1987-09-15)

ஈழ மக்கள் கூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. திலீபன், உண்ணாவிரத மேடைக்குச் சென்றார்.மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார். சரியாக 9.45க்கு திலீபன் மேடையில் அமர்ந்தார். உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்கிற விளக்க உரை கொடுக்கப்பட்டது.
வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபனுக்கு சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, யாசீர் அராபத் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு வழங்கப்பட்டது. தொடர்ந்து கவிதைகள் ,உண்ணாவிரத விளக்க உரைகள் அரங்கேறின. இரவு 11 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வந்து திலீபனை சந்தித்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு அதிகாலை 1.30க்கு உறங்கினார்.

இரண்டாம் நாள் (1987-09-16)

அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்ட திலீபன் சிறுநீர் மட்டும் கழித்து விட்டு முகம் கழுவி தலைவாரிக் கொண்டார். அனைத்து செய்தித் தாள்களையும் படித்து முடித்தார். இளைஞர்கள் பலர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்கள். தான் பேச விரும்புவதாக திலீபன் கூற அவரது நண்பர்கள். சக்தி விரையமாகிவிடும் என்று நண்பர்கள் மறுத்தார்கள் . இரண்டே நிமிடம் என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிட உரையாற்றினார். அன்று இரவும் பிரபாகரன் வந்து திலீபனைப் பார்த்தார் . பனிரெண்டு மணிக்கு உறங்கச் சென்றார் திலீபன்.

மூன்றாம் நாள் (1987-09-17)

காலையில் எழும் போதே திலீபனின் உதடுகள் தண்ணீர் அருந்தாதால் வெடித்து இருந்தது. கண்கள் சற்று உள்ளே போயிருந்தன.மிகவும் சோர்வாக இருந்தார். சிறுநீர் கழிக்கச் சென்ற திலீபன் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்பட்டார். காலை ஒன்பது மணி முதல் இளைஞர்கள் வெள்ளை உடையில் வந்து குவிய ஆரம்பித்தார்கள். கண்ணீர் கவிதைகளும் வீர உரைகளும் முழங்கிக் கொண்டிருந்தன. அன்று பெருமழை பெய்தது.அன்று இரவு அவரது உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.அனால் திலீபன் மறுத்துவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு திலீபன் உறங்கும் போது மணி ஒன்றாகியிருந்தது.

நான்காம் நாள் (1987-09-18)

அதிகாலை ஐந்து மணிக்கே திலீபன் எழுந்துவிட்டார். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அவரால் நடக்க முடியவில்லை என்பதால் அவரது படுக்கையிலேயே சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. பிறகு அவரை மெதுவாக மேடைக்குப் பின்புறம் அழைத்துச் சென்றார்கள்.திலீபன் வயிற்றை பிடித்துக்கொண்டு மிகுந்த க~;டப்பட்டார். சிறிது சிறுநீர் வெளியேறியது. உதவி இந்தியத் தூதுவர் கென் பேச்சுவார்த்தைக்காக வந்தார். ஆவரை அன்டன் பாலசிங்கமும் மாத்தையாவும் சந்தித்துப் பேசினார். சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார வந்து திலீபனைச் சந்தித்தார். சோர்வில் விரைவாகவே திலீபன் உறங்கிவிட்டார்.

ஐந்தாம் நாள் (1987-09-19

திலீபனால் இன்று எழவே முடியவில்லை .உடல் பயங்கரமாக வேர்த்துக் கொட்டியது. “சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்” என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்திய சமாதானப்படையினரின் யாழ்.கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் தரார் திலீபனை பார்க்க வந்தார். மக்கள் அவர் மீது கோபமாக இருந்தனர். திலீபனைச் சந்தித்துவிட்டு மேலிடத்தில் பேசுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஆறாவது நாள் (1987-09-20)

திலீபனால் இன்று பேசமுடியவில்லை. வழக்கம் போல் மக்களும் பத்திரிக்கையாளர்களும் குவிந்திருந்தார்கள்.விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பிரிகேடியர் ராகவன் , கொமாண்டர் ஜெயக்குமார், கடற்படை தளபதி அபயசுந்தர் ஆகியோரிடம் இந்திய அரசு பேசியது ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஏழாவது நாள் (1987-09-21)

இந்திய பத்திரிக்கைள் பல வந்திருந்தன. அவர்கள் திலீபனிடம் பேச விரும்பினார்கள். தனது இருண்டு போயிருந்த விழிகளைத் திறந்து பார்த்தார். அவர்கள் கேட்கும் கேள்வி திலீபனின் காதில் விழவில்லை. அவர்கள் சத்தமாக பேசவேண்டி இருந்தது. திலீபனின் குரலே மாறி கரகரவென இருந்தது. “எந்த முடிவும். நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும். இல்லையெண்டால். நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் கைவிடமாட்டன்” என்றார்.

எட்டாவது நாள் (1987-09-22)

அதிக மக்கள் வந்ததால் அவர்களின் நிழலுக்காக கொட்டகைகள் போட ஆரம்பித்தார்கள். அந்த நாட்களில் தமிழ் மக்களிடம் அதிக புகழ் பெற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் போராளி மதன் திலீபனைப் போல் இரண்டு நாட்களில் தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச்செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடங்கப் போவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் பரவியதை விட அதி வேகமாக அஹிம்சைப் போராட்டம் தீயெனப் பரவியது.

திலீபன் எல்லோரின் ஆதர்ச சக்தியாக இருந்தார். அன்று திலீபனால் பேச முடியவில்லை நடக்க முடியவில்லை, எழ முடியவில்லை ஆனால் வெகு சுலபத்தில் பல்லாயிரம் பேரை அஹிம்சை வழிக்குத் திருப்பி இருந்தார். அனைத்து யாழ்.அரச அலுவலகங்களையும் மக்கள் முற்றுகையிட்டு மறியல் செய்தனர். அனைத்துமே அமைதிவழிப் போராட்டம். மேடையில் பேசமுடியாத மக்கள் எல்லாம் எழுத்தின் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள். இதற்காக ஒரு பத்து பேர் கை வலிக்க வலிக்க எழுதிக் கொண்டிருந்தார்கள். எழுதிய கருத்துக்கள் எல்லாம் அப்போதைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பப்பட்டன.

ஒன்பதாவது நாள் (1987-09-23)

திலீபனின் உடலில் மெல்லிய உதறல் வர ஆரம்பித்திருந்தது. உதடுகள் பாளம் பாளமாக வெடித்து இருந்தன. காலையிலேயே 5000 மக்கள் வந்திருந்தார்கள். ஆனால் திலீபன் கண்ணைத் திறக்கவில்லை. இந்தியப் படை தென் பிராந்தியத் தளபதி திபேந்தர் சிங் இலங்கை வந்து தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். ஒரு மணி நேர பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

பகல் ஒரு மணிக்கு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் இந்தியத் தூதுவர் ஜெ.என்.திக்சித், திபேந்தர் சிங், இந்திய தூதரகப் பாதுகாப்பு அதிகாரி குப்தா ஆகியோர் இந்தியாவின் சார்பிலும் தமிழீழ விடுதலை புலிகளின் சார்பில் தலைவர் பிரபாகரன், தளபதி மாத்தையா, அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம், வழக்கறிஞர் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

பத்தாவது நாள் (1987-09-24)

திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது. திலீபனின் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 52 ஆகியது. திலீபனின் இரத்த அழுத்தம் 80இக்கு50 ஆகியது. தனது சக்தி முழுவதையும் திரட்டி திலீபன் இரண்டு வரி பேசினார் “நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன்” மக்களின் போராட்டம் அதிகரித்தது பல்வேறு ஊர்களில் மக்கள் அடையாள உண்ணாவிரதத்தில் அமர்ந்தார்கள். 6000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர்.

பதினோராவது நாள் (1987-09-25)

உயிருடன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என்றே தெரியாத அளவுக்கு இருந்தார் திலீபன். அனிச்சையாக அவரது உடல் அசைவதன் மூலமே அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தது.அவர் செமி கோமா நிலையில் இருந்தார். பெரிய கட்டில் ஒன்றை கொண்டுவந்து அதில் அவரை மாற்றினார்கள்.அப்போது தான் அவர் படுக்கையிலேயே சிறுநீர் கழித்திருந்ததை பார்த்தார்கள். திலீபனுக்கு வேறு உடை மாற்றினார்கள். திலீபனுக்கு மிகவும் பிடித்த “ஓ மரணித்த வீரனே! – உன் ஆயுதங்களை எனக்குத் தா. உன் சீருடைகளை எனக்குத் தா ” என்கிற பாடலைப் பாடினார்கள். அந்த பாடலைக் கேட்டுக் கொண்டே கோமாவில் விழுந்தார்.

பன்னிரண்டாவது நாள் (1987-09-26)

இந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது. தொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் சரியாக காலை 10.58க்கு வீர மரணம் அடைந்தார். அதிகாரத்துவம் அவனை சாகவிட்டுவிட்டது. ஆனால் அதுவே பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. மீண்டும் அந்த மக்களை ஆயுதம் தங்கிய போராட்டத்திற்கு வழி வகுத்தது.
ஆண்டுகள் 33 கடந்து விட்டன.

இந்த தியாகியின் விடுதலை வேட்கை இன்றும் தமிழர் தாயகத்தின் உரிமைக்கான குரலை ஒருமித்து எழுப்புவதற்கு வித்திட்டிருக்கின்றது.

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் வரையில் வானிலிருந்து தியாகி தீபம் இலட்சிய வேட்கைப் பயணத்திற்கான பாதையை அடையாளப்படுத்தும் சுடராய் இருப்பார் என்பது நிதர்சனம்.

Print Friendly, PDF & Email