SHARE

ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் பண்பாட்டு உரிமைகளை நிலைநிறுத்த அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல் என அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் பிரதிநிதி கெவின் கணபதிபிள்ளை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது .

இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில், அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதம் இடம்பெற்றது.

இதன்போது, அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் (Society for Development and Community Empowerment) சார்பாக உரையாற்றி கெவின் கணபதிபிள்ளை தனது உரையில் இதனை வலியுறுத்தினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் பண்பாட்டு உரிமைகளை நிலைநிறுத்த அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல் என்று இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்களாட்சி நடைமுறைகள் இடம்பெறவில்லை.

இலங்கை பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கிழக்கு, வடக்கு மாகாண வேட்பாளர்களை குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி வேட்பாளர்களையும் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களையும் இராணுவமும் பொலிஸாரும் அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

தேர்தல் பரப்புரையின்போது கண்காணிப்பு குழுவையும் இருசக்கர வாகன குழுவையும் இராணுவம் பயன்படுத்தியது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள கட்டாயப்படுத்தல், வேட்பாளர்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு தொடர்ந்து செய்ததென வழக்கு பதிவுசெய்தது. குருநகருக்கு பரப்புரைக்காக சென்ற விக்னேஸ்வரனை இருசக்கர வாகன குழு இடையூறு செய்தது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவவேண்டும்” என தனது உரையில் அவர் வலியுறுத்தினார்.

Print Friendly, PDF & Email