SHARE

அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம்  இளம்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுமந்திரனின் வருகையினையடுத்து அனந்தி சசிதரன் வெளிநடப்பு செய்ததுடன் இக்கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை

தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில்  எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம், இன்று (17) காலை 10.30 மணியளவில்  ஆரம்பமானது.

குறித்த கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முதல் தடவையாக வந்திருந்தார். இதனால், அவரது வருகையையடுத்து அங்கு வந்திருந்த ஈழவர் ஜனநாயக கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்திலிருந்து வெளியேறினார். அதேவேளை, குறித்த கூட்டத்திற்கு சுமந்திரன் வருகை தரவுள்ளார் என்ற தகவலையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக  அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும்  அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக இன்று ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளைஞன் மண்டபத்தில் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான  சித்தார்த்தன், சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முன்னாள் வட மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளான ஶ்ரீகாந்தா, சுரேஸ்பிரேமச்சந்திரன் மற்றும் அருந்தவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email