SHARE

ITJP மற்றும் HRDA யின் இடைக்கால நீதிப்பொறிமுறை: 

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம் பெற்ற உள்நாட்டு போரில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரையில் கணக்கிடப்படாமலேயே உள்ளது.

அந்தவகையில், இறந்தவர்கள் தொடர்பான விபரங்களை சேகரிப்பதன் மூலம் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம் (International Truth and Justice Project – ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (Human Rights Data Analysis Group – HRDA) ஆகிய நிறுவனங்களால் இலங்கையில் “இறந்தவர்களை கணக்கெடுத்தல் செயற்திட்டம்“ (Counting the Death Project) என்ற பணி உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,  “இறந்தவர்களை கணக்கெடுத்தல் செயற்திட்டம்” (Counting the Death Project) என்ற பணியில் ஈடுபட்டுள்ள பிரித்தானிய தொண்டர் குழுவை வழிநடத்தும் மனித உரிமை செயற்பாட்டாளர்களான திருமதி காண்டீபன் கிறிஸ்ரி நிலானி மற்றும் திரு சசிகரன் செல்வசுந்தரம் ஆகியோரை தொடர்பு கொண்ட ‘நமது ஈழநாடு‘, இந்த கணக்கெடுப்பு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும், அதன் செயன்முறை தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும், இதற்கு தமிழ்மக்கள் மற்றும் அமைப்புக்கள் எவ்வாறு உதவலாம் என்றது குறித்தும் ஒரு விளக்கத்தை வழங்கும் படி கேட்டிருந்தது.

அதனடிப்படையில் திருமதி காண்டீபன் கிறிஸ்ரி நிலானி மற்றும் திரு சசிகரன் செல்வசுந்தரம் ஆகியோர் வழங்கிய சிறப்பு செவ்வி கீழே தரப்பட்டுள்ளது. 

திருமதி. காண்டீபன் கிறிஸ்ரி நிலானி

(B.Sc (Hon), (UOJ, Sri Lanka), M.Sc (UOJ, Sri Lanka)

மனித உரிமை செயற்பாட்டாளரான திருமதி காண்டீபன் கிறிஸ்ரி நிலானி யாழ் பல்கலைக்கழகத்தில் விவசாய வேளாண்மையில் இளங்கலைமானி [B.Sc (Hon) in Agriculture] மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் முதுகலைமானி [M.Sc (Hon) Environmental Management] பட்டப்படிப்புக்களையும் பூர்த்தி செய்து சிறப்புப் பட்டங்களை பெற்றவர். அதேவேளை யாழ். மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி அலுவலராகவும்; கடமையாற்றிய அனுபவம் பெற்றவர். யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் முகாமைத்துவதத்திற்கான தீர்வுகள் பற்றி ஆய்வுசெய்து, நூல் வெளியிட்டவர். தற்போது இலண்டன் புரூணல் பல்கலைக்கழகத்தில்; (University of Brunel) நீரியல் பொறிமுறையில் மேலதிக முதுகலைக் கற்கைநெறியை (Advanced Masters in Water Engineering) மேற்கொண்டு வருவதுடன், பல சந்வதேச மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து, இலங்கையில் நடைபெற்ற, தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல் சேகரிப்பு, ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்.

கேள்வி :- வணக்கம் நிலானி. Counting the Death என்ற இந்த பணி பற்றி விளக்க முடியுமா

நிலானிஇலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம் பெற்ற போரில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் பெயர் விபரங்கள் இதுவரையில் ஒன்று திரட்டப்படாமல் உள்ள நிலையில், இந்த விபரங்களை  திரட்டும் முக்கிய பணியை உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம் (International Truth and Justice Project – ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (Human Rights Data Analysis Group – HRDAG) ஆகிய சர்வதேச நிறுவங்கள் கடந்த பெப்ரவரி 2019 இல் ஆரம்பித்து உள்ளன. 

ITJP யின் பணிப்பாளரான, முன்னாள் ஐ.நா. நிபுனரும் பிரபல மனித  உரிமை சட்டத்தரணியான யாஸ்மின் சூக்கா அவர்களும், HRDAG யின் பணிப்பாளரான பற்றிக் போல் அவர்களும் இதை வழிநடத்துகின்றனர். அமெரிக்காவை தளமாக கொண்ட HRDAG என்ற நிறுவனம் பல விருது பெற்ற விஞ்ஞானிகளை கொண்டு இயங்குவதுடன்  குவாட்டமாலா, கொலம்பியா, கொசோவா, சியரா லியோன் மற்றும் கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றுகளுக்கு நம்பகமான தகவல்களை தொகுத்து வழங்கிய 30 வருட அனுபவத்தை கொண்ட அமைப்பாகும். 

இந்த பணியின் இலக்கானது முடிந்தளவில் கொல்லப்பட்ட மக்களின் விரங்களை திரட்டுவதுடன், விபரங்கள் கிடைக்காத மக்களின் எண்ணிக்கையை புள்ளிவிபர மற்றும் விஞ்ஞான ரீதியில் கணிப்பிட்டு, ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை நிறுவுவதாகும். இது எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய சர்வதேச சட்ட விசாரணைகளுக்கு பெரும் பலத்தை சேர்ப்பதுடன் இறந்தவர்களுக்கான நியாயத்தையும் பெற்றுத்தரும் என நம்புகிறோம். 

“யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் உண்மையான இறப்பு எண்ணிக்கையை அறிய முடியாதிருப்பது அதிர்ச்சிக்குரியது. இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது அவர்களுக்கு மரியாதை செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்” என்று யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இடைக்கால நீதிப்பொறிமுறை (Transitional Justice) மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை நீதி (Remedial Justice) என்பவற்றுக்கு மிகவும் அத்தியாவசியமாக இந்த பணி இருக்கின்ற போதிலும் இது இன்னமும் தமிழர்கள் மத்தியில் பிரபலம் அடையாத காரணத்தால், மக்களிடம் இருந்தும், பொது அமைப்புக்களிடம் இருந்தும் விபரங்களை பெற்றுக்கொள்ளுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. 

எனவே இந்த முக்கிய பணியை இன்னும் தாமதிப்பது ஈழத்தமிழ் மக்களான எமக்கான நீதி தேடலை நாமே தாமதிப்பதாகும். இதற்காக ஒத்துழைப்பை தமிழ் மக்களிடமும், சமூகநலன் சார் அமைப்புக்களிடமும் கோருகிறோம். 

கேள்வி :- இறந்தவர்களை கணக்கெடுப்பது என்பது எந்தவகையான காலப்பகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது.

 
பதில்2019 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் இறந்தவர்களின் விபரங்களையே நாங்கள் சேகரிக்கின்றோம். தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது.

கேள்வி: உள்நாட்டு யுத்தத்தின் போது அநேகமான போர் வீரர்களும் இறந்துள்ளார்கள். அவ்வாறு இருக்கையில் நீங்கள் எந்த அடிப்படையில் இதில் இறந்தவர்களை கணக்கில் கொள்கிறீர்கள்

பதில்:-  இதில் போர் வீரர்கள் பொதுமக்கள் என நாங்கள் வேறுபடுத்தவில்லை. அனைவரையுமே உள்ளடக்கின்றோம். ஏனெனின் இறுதிப் போரின் போது யார் ஆயுதம் தாங்கியிருந்தார்கள் யார்  பொது மக்கள் என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் சிரமமானதாகும்.

அதேவேளை இக்காலப்பகுதியில் பட்டினி அல்லது நோயினால் இறந்திருந்தாலும் அவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்படுகின்றது. ஏனெனில் போருடன் தொடர்புபட்டு வன்முறையால் இறந்தவர்கள் தொடர்பில் நாங்கள் அதி முக்கியத்துவம் கொடுக்கின்றோம். இதில் போரினால் ஏற்பட்ட பட்டினி அல்லது நோய் என்பதில் கவனம் செலுத்தப்படுதல் அவசியம். 
 
கேள்வி :- இந்தக்கணக்கெடுப்பின் போது நீங்கள் விபரங்களை சேகரிக்க அனுகும் போது காணாமல் போனோர் தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட வாய்ப்புள்ளதே! அவர்களின் பெயர்களை இறந்ததாக பதிவு செய்கிறீர்களா?

புதில்:- இந்த கணக்கெடுப்பில் காணாமல் போனோரையும் நாங்கள் பதிவு செய்கின்றோம். அதனால் அவர்களை இறந்ததாக கணக்கெடுப்பதாக அமையாது. இதில் காணாமல் போனவர்களை வேறுபடுத்தி காட்டப்படுகிறது. இதில் குழப்பநிலை கொள்ள வேண்டியதில்லை.

மேலும் எம் தமிழ் இனத்தில் இத்தனை எண்ணிக்கையிலானோர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை கணக்கிடுவதன் மூலம் எமக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இன அழிப்பே என்பதை உறுதிப்படுத்த முடியும். எனவே இந்த செயல்திட்டத்தில் அனைவரும் முன்வந்து பங்களிப்பினை வழங்க வேண்டும் என நான் கோரிநிற்கிறேன்.

திரு. செல்வசுந்தரம் சசிகரன்

B.Sc (Hon), MBA (University of Gloucestershire), M.Sc (Cardiff Metropolitan University)

திரு. செல்வசுந்தரம் சசிகரன் இலங்கையில் யூனியன் அசூரன்ஸ், இலங்கை வங்கி மற்றும் செலான் வங்கிகளில் பணியாற்றிய அனுபவத்தை உடையவர். பிரத்தானியா குளொஸ்டர்சயர் பல்கலைக்கழகத்தில் கணக்கில்துறையில் இளங்கலைமானி [B.Sc (Hon) in Science in Accounting ] மற்றும் வியாபார நிர்வாகத்தில் முதுகலைமானி Masters in Business Administration] பட்டங்களை பெற்றவர். அத்துடன் Cardiff Metropolitan University யில் சர்வதேச சுற்றுலா முகாமைத்துவத்தில் மேலதிக முதுகலைமானி [Masters in International Tourist Management] பட்டத்தை பெற்றவர். இலங்கையில் ஆட்கடத்தலுக்கு உள்ளாகி தப்பித்த சொந்த அனுபவத்தை உடைய இவர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டுவருபவர். தற்போது இறந்தவர்களை கணக்கெடுக்கும் திட்டத்தின் பிரித்தானிய தொண்டர் குழுவை வழிநடத்தி வருகிறார்.


கேள்வி:- குறித்த செயற்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டதன் நோக்கம் என்ன

பதில்:- கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் இனத்துக்கு எதிரான மாபெரும் இன அழிப்பு போரை அரங்கேற்றிய ராஜபக்ஷக்களே தற்போது மீண்டும் ஆட்சிப்பீடத்தில் இருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என அனைத்திலும் எண்ணிக்கையை மறைப்படிப்புச் செய்து சர்வதேசத்தின் நீதிப்பொறிமுறைக்குள் தங்களை சிக்கிக்கொள்ளாத வண்ணம் பாதுகாத்துக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின் மூலம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையையே செய்துள்ளது என்பதை நிரூபிக்க முடியும் என நாம் நம்புகிறேன். அதேவேளை யுத்தக் குற்றவாளிகளை சர்வதேச நீதி மன்றில் முன்னிலைப்படுத்தவும் சர்ந்தப்பம் அமையும். அநியாயமாக கொல்லப்பட்ட எனது மக்களுக்கு நான் செய்யவேண்டிய கடமையாக இதை நான் பார்க்கிறேன். 


கேள்வி:- உலகளாவிய ரீதியில் இந்த பதிவை பலதரப்பட்டவர்கள் மேற்கொண்டுவருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நீங்கள் பதிவு செய்யும் இறந்த ஒருவரின் பெயரை இன்னெருவர் பதிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவே. இதனால் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்படவாய்ப்புக்கள் உள்னவே

பதில்:- நிச்சயமாக ஒருவரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் இடம்பெறும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. ஆனால் அதனை விஞ்ஞான முறையில் பகுப்பாய்வு செய்தே இறுதி எண்ணிக்கை வெளியிடப்படும். தரவு சேகரிப்பில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவமுள்ள மனித உரிமைகள் ஆய்வுக்குழு (HRDAG) அதற்கான முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. பல சர்வதேச நீதிமன்றுகளில் அவர்கள் வழங்கிய தகவர் அடிப்படையில் வழக்குகள் வெற்றிபெற்று, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.  எனவே இதில் குழப்பம் கொள்ளத்தேவையில்லை.


கேள்வி:- இந்த செயற்திட்டத்தினை பற்றி மக்கள் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும். அதே நேரம் அவர்கள் தாமாகவே தகவல்களை வழங்கக்கூடிய வழி உள்ளதா

பதில்:- இந்த செயற்திட்டம் தொடர்பில் https://itjpsl.com/reports/counting-the-dead#tamil என்ற இணையத்தள முகவரியில் நீங்கள் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளலாம். அதேவேளை தகவல்களை பதிவு செய்ய இலகுவான படிவம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை பூர்த்தி செய்து itjpsl@gmail.com , info@hrdag.org  என்ற மின்னஞ்சல்களில் எவற்றிற்காவது நீங்கள் அனுப்பி வைக்கலாம்.

கேள்வி:- தகவல்களை சேகரிக்கும் பணியில் இதுவரையில் நீங்கள் பெற்ற மறக்கமுடியாத அனுபவம் ஏதும் உள்ளதா

பதில்:-   குறித்த செயல்திட்டத்தில் நான் இறந்தவர்களை கண்கெடுக்கும் சில சர்ந்தப்பங்களில் குடும்பத்தில் அனைத்து உறவுகளையும் யுத்தத்தில் பறிகொடுத்த பல நபர்களை சந்திக்கும் நெகிழ்ச்சியான தருணங்களை எதிர்கொள்கின்றேன். அவர்கள் உளவியல் ரீதியாக பெரிதளவில் பாதிப்பை அடைந்துள்ளார்கள்.

அந்தவகையில் இறந்து போனவர்களை பதிவு செய்வதன் மூலம் நாம் அவர்களுக்கு கைமாறாக நீதியை பெற்றுக்கொடுக்கும் வழியை ஏற்படுத்த முடியும். எனவே உலகம் முழுவதுமுள்ள உறவுகளிடம் நாம் கோருகிறோம்.  உங்கள் உறவினர் நண்பர்கள் அயலவர்களிடம் பேசி அவர்களுக்கு தெரிந்த அறிந்த மரணித்தவர்களின் பெயர்களை சேகரியுங்கள். இதில் விபரங்களை சேகரிப்பவர்கள் தொடர்பில் இரகசியம் பேணப்படும் என்பதை இங்கு நான் உறுதிப்படுத்துகின்றேன்.

தமிழ் இனத்துக்கு எதிரான மாபெரும் இன அழிப்புப் போர் இடம்பெற்ற 10 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு வெளிவருவுள்ள இந்த கணக்கெடுப்பு சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறவுள்ளதோடு தமிழர்களின் நீதிக்கான வாசலாகவும் அமையும் என்பது எதிர்பார்ப்பு. 

யாராவது உங்கள் குடும்பத்தவர்கள், உறவுகள் மற்றும் தெரிந்தவர்கள் கொல்லப்பட்டிருந்தால் தயவுசெய்து எம்மை தொடர்புகொண்டு, அல்லது ITJP இணையத்திலுள்ள படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் அந்த விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலதிக தகவல்களுக்கு..

https://itjpsl.com/#tamil , https://itjpsl.com/reports/counting-the-dead#tamil

Print Friendly, PDF & Email