SHARE

லெப். கேணல் ஈழப்பிரியன் கிளிநொச்சி மாவட்ட துணைக்கட்டளைத் தளபதிபெயருக்கேற்றாற்போல் தனது பிரியம் முழுவதையும் ஈழத்தின்மீது மட்டுமே கொட்டிச்சென்ற வீரத்தளபதி.

கடுகு சிறிதெனினும் காரம் பெரிதென்பது ஈழப்பிரியனுக்காகவே எழுதப்பட்ட வாக்கு ஆயிற்று. ஆடம்பரம் ஏதுமற்ற களநாயகன். களத்தில் மட்டுமல்லாது தளத்திலும் தனது தடங்களை ஆழமாக விட்டுச்சென்ற அற்புதமான போராளி.

ஆரம்பத்தில் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் மெய்ப்பாதுகாவலனாக வலம்வந்த இந்த வீரன், தனது பணியை எத்தனை நேசித்தார் என்பதை கூடவிருந்த போராளிகள் அறிவார்கள். 

முகாம் பொறுப்பாளன், துப்பாக்கிச் சூட்டு பயிற்சியாளன், விநியோக அணித் தலைவன், முகாம்களின் கட்டுமானப் பணிப்பாளன், ஆயுத அறிக்கை பரிசோதகன் என அரசியற்றுறையில் அவர் சுமந்த பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதனை வாழ்வில் சாதித்துக் காட்டி சரித்திரமாகிப் போனவர் தளபதி ஈழப்பிரியன் என்றால் அது மிகையாகாது. 

எந்தச் சிறிய வேலையாக இருந்தாலும் அதற்கான வளங்கள் எத்தனை குறைவாக இருந்தாலும் சலிக்காது, மிகவும் நேர்த்தியாக அதனைச் செய்துமுடிக்கும் அவரது இயல்பே, அத்தனை பணிகளையும் அவர்பால் இழுத்துப்போயிற்று.

எப்போதும் அமைதியாக புன்னகைக்கும் அவரது சிந்தனைகளோ அடங்காத புயலாக அங்குமிங்கும் சுழன்றுகொண்டிருக்கும்.
ஈழத்தில் இறுதிக்கட்ட போர் உக்கிரம் கொண்டிருந்த காலம் அது. வல்லரசுகளின் உதவிகளும் வால்பிடிகளின் காட்டிக்கொடுப்புகளும் சிங்களத்திற்கு கைகொடுக்க, வன்னிப் பெருநிலப்பரப்பை எப்படியாவது விழுங்கிவிடவேண்டும் என்ற வெறியோடு, எதிரி நான்கு முனைகளிலும் ஒருசேர முன்னேறிக்கொண்டிருந்தான்.

தலைவரோடு தளபதிகளும் போராளிகளும் அவர்களோடு மக்களுமாய் தூக்கம் தொலைத்து ஈழமண்ணைக் காப்பதற்காய் இரவுபகலாய் களப்பணிகளில் கரைந்துபோய்க் கொண்டிருந்தனர். 
தலைவரின் திட்டங்களை நேர்த்தியுற ஒப்பேற்றி, விடுதலைக்கு வலுச்சேர்க்க தெரிவுசெய்யப்பட்ட முத்துக்களில் ஒன்றாய் மிளிர்ந்த ஈழப்பிரியன் வயதில் இளையவனாய் இருந்தபோதும் கிளிநொச்சி மாவட்ட துணைக் கட்டளைத் தளபதியாய் உயரம் கண்டார். 

தலைவர் தன்மேல் கொண்ட நம்பிக்கையை சிறிதும் களங்கப்படுத்தாத அந்த மகாவீரன் தனது போராளிகளுடன் தானும் ஒருவனாக களத்தை வாழ்வாக்கினார். தனது வீரர்களுக்கு எல்லாமுமாக இருந்து அன்பையும் வழிகாட்டலையும் தளராத உறுதியையும் ஊட்டி கலிங்கத்துப் பரணி கண்டார். 

அரும்புமீசையுடன் வலம்வந்த அந்த அழகனுக்குள் விளைந்த வீரம் மலையையும் சாய்க்கவல்லதாய் இருந்ததைக் கண்டு எதிரிகூட மலைத்துப்போய் நின்ற சம்பவங்கள் ஏராளம் ஏராளம்!
‘என்ர உயிர் இருக்கும்வரை சிங்களவன் இந்த எல்லை தாண்டமாட்டான். அப்படி அவன் தாண்டிட்டான் என்றால் என்ர வெற்றுடல் தான் அங்க இருக்கும்’ என மிகவும் நிதானமாகவும் ஆழமாகவும் கூறிய அந்த நெஞ்சுரம் கொண்ட தானைத் தளபதியின் வார்த்தைகள் பலித்தபோது வேங்கைகள் ஒருகணம் விக்கித்துத்தான் போனார்கள். 

சொல்வேறு செயல்வேறல்லவென வாழ்ந்துகாட்டிய இந்த வீரத் தளபதியை இழந்து இன்றோடு 12 வருடங்கள் பறந்தோடிப்போயிற்று. 

தனது இறுதி மூச்சுவரை களத்தில் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி, எதிரியைத் திணறடித்து வீரசுவர்க்கம் எய்திய இந்த மாசற்ற மறவனை, மனதில் இருத்துவோம். 

காலத்திற்கேற்ற பணிகளை முன்னெடுத்து இந்த மாபெரும் வீரனதும் வித்தாகிய அவர்தம் தோழர்களதும் தமிழீழக் கனவை விரைவில் நனவாக்குவோம் என இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்வோம்.

Print Friendly, PDF & Email