SHARE

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரிய சாட்சியங்களுடன் இம்முறை நிரூபிப்போம் – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் 2021 பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 19 ஆம் திகதிவரை நடைபெறும் குறித்த கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்நிலையில் மேற்படி கூட்டத்தொடர் தொடர்பில் விபரிக்கையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது.

இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. தீவிரவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டது. உரிய சாட்சிகளுடன் இதனை நிரூபிப்போம்.

நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தாருஷ்மன் குழு மற்றும் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் ஆகியோர் இடமளிக்கவில்லை. இம்முறை இவ்விரு அறிக்கைகளையும் முன்வைப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்க்கின்றது.

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என சாட்சியங்களுடன் சுட்டிக்காட்டுவதற்கு தயார். சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளன.” – என்றார்.

Print Friendly, PDF & Email