SHARE

உயிரிழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் உள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடித்தழிக்கப்பட்டது. அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாநகர முதல்வர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்கால் நினைவு தூபி, இரவோடு இரவாக திருட்டுத்தனமாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் சீண்டும் கோழைத்தனமானது இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலங்கை தீவில் தமிழ் மக்கள் உயிர் இழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அடிப்படை உரிமை மீறல் ஆகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email