SHARE

 – நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புக்களின் ஒன்றிணைந்த கோரிக்கைக்கு பிரித்தானிய மிதவாத கட்சியின் தலைவர் முழுமையான ஆதரவு 

இலங்கையில் இடம்பெற்ற கடுமையான சர்வதேச குற்றங்கள் குறித்து  விசாரிக்கவும் வழக்கு தொடரவும்  தேவையான சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை  (International Independent Investigation Mechanism) உருவாக்க, நடைபெறவுள்ள 46 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானத்தை இங்கிலாந்து கொண்டுவர வேண்டுமென்ற பிரித்தானிய தமிழ் அமைப்புக்களின் ஒருமித்த கோரிக்கைக்கு தனது முழுமையான ஆரதவை வெளிப்படுத்தியுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான எட் டேவி (Ed Davey) , அந்நாட்டு பிரதமர் பொறிஸ் ஜோன்சனிடம் இதற்கு ஆதரவாக தனது கோரிக்கையும் விடுத்துள்ளார். 

பிரித்தானிய மிதவாத கட்சியின் (Liberal Democrats) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரான எட் டேவி, தமிழர்களின் தைத்திருநாளான நேற்று அவர் பிரித்தானிய பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் போரின் போது நிகழ்ந்தாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றது. தவிர, கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கை, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கான தனது உறுதிப்பாட்டிலிருந்தும் விலகியது. இதன் மூலம் குற்றங்களுக்கு  யாரும் பொறுப்பேற்கமாட்டார்கள் என்பது தெளிவாகியுள்ளது. 

மேலும், குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பல தமிழ் குழுக்கள் இங்கிலாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளமை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன். தவிர, இங்கிலாந்து தமிழ் சமூகத்தை சேர்ந்த குழுக்கள் கூட்டணியாக ஒருமித்து வெளியுறவு செயலருக்கு இம்மாதம் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். அதில்  சர்வதேச விசாரணையை நடத்துவதற்கான பொறிமுறையொன்றினை இலங்கைக்கு எதிராக உருவாக்கமாறு கோரியுள்ளனர். அதேவேளை தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவும் இது தொடர்பில் கடந்த நவம்பரில் வெளியுறவுச் செயலருக்கு கடிதம் எழுதியிருந்தது. எனினும் அதற்கான பதில் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 

சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்குவதே இலங்கைக்கு எதிராக அர்த்தமுள்ள சரியான நடவடிக்கையாகும். இதற்காக இனப்படுகொலையினால் பாதிப்படைந்துள்ள தமிழர்களிடமிருந்து ஆதாரங்களை சேகரிப்பதுடன் 2015 செப்டம்பரில் பெறப்பட்ட OISL அறிக்கையில் உள்ள தகவல்களையும் ஆதாரங்களையும் பயன்படுத்தலாம். 

எனவே, இலங்கையில் பொறுப்புகூறலுக்கான ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இம்முறை முக்கிய பங்கை இங்கிலாந்து கொண்டுள்ளதால் மேற்படி பொறிமுறையை அமுல்படுத்தும்படி தங்களை கோருகிறேன் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

FAO-the-Prime-Minister-14.01.21

Print Friendly, PDF & Email