SHARE

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ்.ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களுடன் இணைந்து கிழக்கு ஊடக ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி ஈகைச்சுடர் ஏற்றி 2 நிமிட மௌனன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை, சுகிர்தராஜன் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.

மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின. இதனால் சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அழுத்தங்கள் ஏற்பட்டன.

சுகிர்தராஜன் யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடக பணியாற்றியபோதே கடந்த 2006 ஜனவரி 24 ஆம் திகதி, திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். மட்டக்களப்பு குருமண்வெளியை பிறப்பிடமாகக்கொண்ட சுகிர்தராஜன், அம்பாறை வீரமுனையில் வசித்துவந்த நிலையில் திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email