தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு நீதிகேட்டு உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் தமிழின அழிப்பிற்கான நீதியினைப் பெற ஜக்கிய நாடுகள் அவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதிவிசாரணையை ஒப்படைப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தியும் ஜெனிவா பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் நெதர்லாந்து குற்றவியல் நீதிமன்றின் முன்றலிலிருந்து ஜெனிவா நோக்கிய கவனயீர்பு ஈருருளிப்பயணமும் இன்று (8) திங்கள் கிழமை ஆரம்பமானது.
குற்றவியல் நீதிமன்றின் முன்பாக அகவணக்கத்துடன் ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டு பெல்ஜியம் ஜரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையமுன்றலை நோக்கி பயணப்படுகின்றது.
கடுங்குளிரிலும் எமது மக்களுக்கான நீதி வேண்டி புலம்பெயர் தமிழின உணர்வாளர்கள் இந்த ஈருருளிப் பயணத்தை மேற்கொள்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஈருருளிப் பயணமானது எதிர்வரும் புதன் கிழமை (10) ஜரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையமுன்றலில் நடைபெறும் கவனஈர்ப்பு ஒன்றுகூடலில் கலந்து கொள்வதுடன் தொடர்ந்து ஜெனீவா முன்றல்வரை பயணிக்க இருக்கின்றது.