SHARE

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாவிடம் இன்று (புதன்கிழமை) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த17ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என்னை விசாரணைக்காக கொழும்பு வருமாறு எனது மகளின் வீட்டில் அறிவித்தல் ஒன்றை வழங்கியிருந்தார்கள். எனது வயதும் மற்றும் சுகவீனம் தொடர்பில் நான் அவர்களிற்கு தொலைபேசி ஊடாக கூறியிருந்தேன்.

வவுனியா அல்லது கிளிநொச்சிக்கு என்னால் வர முடியும் எனவும் அவர்களிடம் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அமைவாக இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி வர சொன்னார்கள்.நான் சென்றிருந்தேன்.

இதன்போது பல விபரங்களை திரட்டி வைத்தனர் வங்கி கணக்குகள், வங்கிக்கு பணம் வருவது உள்ளிட்ட விபரங்கள அவர்கள் வைத்திருந்தார்கள். எனது வங்கி கணக்கு தொடர்பில் துருவி ஆராய்ந்தார்கள்.

அதற்கு நானும் பதிலளித்திருந்தேன். எனது மகன் வெளிநாட்டில் உள்ளார். அதேபோல் எனது சகோதரங்களும் வெளிநாட்டில் உள்ளார்கள். காணி வித்த பணத்தினையும் வங்கியில்தான் போட்டுளேன். எனவும், மகன் எனக்கு அனுப்பிய பணத்தையும் இதில்தான் போட்டுள்ளேன் எனவும் அவர்களிடம் கூறியிருந்தேன்.

2010ஆம் ஆண்டு ஜெனிவா சென்றீர்களா என வினாவினார்கள் . 2010 நான் செல்லவில்லை எனவும், 2018 மார்ச்சிலிருந்து தொடர்ச்சியாக சென்றிருந்தேன் எனவும் நான் தெரிவித்திருந்தேன்.

அங்கு என்ன கதைக்கிறீர்கள் என கேட்டார்கள். எமக்கு நீதி கிடைக்கவில்லை, நாங்கள் எமது பிள்ளைகளை கையளித்தோம். சரணடைந்தார்கள். இலங்கை அரசிடம் அழுத்தம் கொடுத்தாவது எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள் என்று கோரியிருந்தோம்.

அத்தோடு, இலங்கையில் நீதி கிடைக்காது. அந்த நீதி சர்வதேசத்திடமிருந்துதான் கிடைக்க வேண்டும் என்பதையும் நாம் கூறியிருந்தோம் எனவும் தெரிவித்ததாகவும், மேலும் பல விடயங்களை அவர்கள் வினவியதாகவும் தெரிவித்தார்.

அவர்கள் என்னிடம் எதிர்பார்த்த பதில்களும், விசாரணை குறிப்புக்களும் திருப்திகரமானதாக அவர்களிற்கு அமைந்திருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email