SHARE

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின்போது, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அவர்கள் குறிப்பிடுகையில், “இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக் குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தை முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, மசிடோனியா, மாலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இணையனுசரணை நாடுகள் பரிந்துரைக்க வேண்டும்.

அத்துடன், கடந்தகால சம்பவங்களையும், நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலைமைகளையும் ஆராய்ந்தால் ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கையில் பொறுப்புணர்வை உண்மையாகக் கையாள எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல அனைவரும் அணி திரழ்வோம்.

இந்நிலையில், நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு வேண்டி நிக்கின்றோம்.

அதற்கு அமைவாக எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை காலை எட்டு மணிக்கு குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி பழைய வைத்தியசாலையைச் சென்றடையும்.

எனவே, தொடர்ச்சியான அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமே எமக்கான நீதியைப் பெறமுடியும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email