SHARE

நீதிகோரி உண்ண மறுக்கும் போராட்டம் ஒரு வாரத்தை எட்டியது

மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ள இலங்கை அரசிற்கு மேலும் இன்னுமொரு கால அவகாசம் வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குராலாய் பசித்திருந்து நீதிக்காய் போராடும் அம்பிகையின் அறப்போர் இன்றுடன் ஒரு வாரத்தை பூர்த்திசெய்கின்றது.

மனித நேயத்தின் உச்சம் நாங்களே என மார்தட்டிக்கொள்ளும் பிரித்தானிய அரசு அம்பிகையின் கோரிக்கைகளுக்கு தொடர்ந்தும் மௌனம் காத்து வருவது உலக நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி நான்கு அம்சக்கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து திருமதி. அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 7  ஆவது நாளை (05.03.2021) எட்டியுள்ளது.

தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள  நிலையிலும்   தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் உயிர் தியாகிகளான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் இன்றைய நாளினை தொடர்ந்துள்ளார்.

தனது கோரிக்கைகளில் ஒன்றையாவது பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அதுவரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களையும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கைகளை நிறைவேற்ற தத்தம் நாட்டு பிரதிநிதிகழுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை நேற்றைய 6 ஆம் நாள் மெய்நிகர் (Zoom) நிகழ்வு  தாயகத்திலிருந்து தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை லியோ, மௌலவி ரிஸ்வி மற்றும் பிரித்தானிய ஆன்மீக பணியகத்திலிருந்து அருட்தந்தை எல்மோ ஆகியோரின் ஆசிச்செய்திகளுடன் ஆரம்பமானது

தொடர்ந்து வணக்க நடனம் இடம்பெற்றதுடன்  லோகன் கணபதி (Member of Provincial Parliament (MPP) for Markham-Thornhill, Canada, தமிழகத்திலிருந்து முன்னாள் தலைமை நீதியாளர் அரி பரந்தாமன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார், பிரான்சிலிருந்து ‘நமது FM’ வானொலியின் இயக்குநர் குருபரன், தமிழகத்திலிருந்து இயக்குநர் திரு. கௌதமன், முன்னாள் போராளிகளான  ஈழவன், திருமதி. ஆர்த்தி, கனடாவிலிருந்து தேசிய செயற்பாட்டாளரான கண்ணன் மற்றும் செயற்பாட்டாளர் ஈசன் ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றினர்.

இந்நிலையில்  6 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் முன்னாள் நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன், தமிழகத்திலிருந்து ஆய்வாளர் அய்யநாதன் மற்றும் தாயகத்திலிருந்து அரசியல்வாதிகள் என பலர் அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

அதேவேளை உடல் சோர்வுற்ற நிலையிலும் திருமதி அம்பிகை செல்வகுமார் மக்களிற்கான தனது கோரிக்கை தொடர்பில் விசேட உரை நிழ்த்தவுள்ளார்.

மேற்படி மெய்நிகர் (Zoom) நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09

Print Friendly, PDF & Email