SHARE

வவுனியா- ஓமந்தையில் கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அப்பிரதேச மக்கள் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் கடந்த வருடம், கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து காணப்பட்டமையினால், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்த காலப்பகுதியில் மக்களை கண்காணிப்பதற்காக வவுனியாவில் ஓமந்தை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டன.

நாட்டில் ஊடரங்கு தளர்த்தப்பட்டு வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்க  அனைத்து மக்களும் தற்போது ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் வவுனியா- ஒமந்தையில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியை நிரந்தரமாக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது குறித்த ஓமந்தை வீதிக்கு அருகிலுள்ள கரையில், சீமெந்திலான தளம் அமைக்கப்பட்டு, இரண்டு நிரந்தர கொட்டகைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்” என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Print Friendly, PDF & Email