SHARE

2009 ஆம் ஆண்டில் ஆயுத போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும், தமிழ் மக்களுக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் நிற்கவில்லை என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.”

தமிழர் தாயகத்தை இழத்தல் ” மாநாட்டில் உரையாற்றும் போதே விக்னேஸ்வரன் இதனை கூறினார்.தமிழ் மக்கள் இந்த நாட்டின் சுதேச குடிமக்கள். 3000 ஆண்டுகளுக்கு மேலாக நாம் இந்த நாட்டில் வாழ்ந்துவருகின்றோம்.

அந்நியர்களின் காலனியாதிக்கம் 1505 ஆம் ஆண்டு ஏற்படும்வரை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் நிலப்பரப்பு தமிழ் மன்னர்களின் முழுமையான ஆளுகையின் கீழ் செழிப்பாக இருந்துள்ளது என்று கூறியுள்ளார்.

பிரித்தானியர்களின் ஆட்சியின்போது 1833 ஆம் ஆண்டு இலங்கையின் நிர்வாகம் ஒன்றாக்கப்பட்டு, 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னர் அதிகாரம் சிங்கள மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட நாள் முதல் எமது நிலங்கள் அதிகார பலத்தின் மூலம் சிங்கள அரசாங்கங்களினால் அபகரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது என சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.1970 இல் ஆயுத போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது.

எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு என்பது சத்தம் இன்றி எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு பெரும் யுத்தமாக இன்று மாறியிருக்கிறது. நிலம் மட்டுமன்றி, நிலத்துடன் சேர்த்து, எமது வாழ்வும், அடையாளமும், வரலாறும் சேர்த்தே அழிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரும் மனித உரிமை மீறல் ஆகும். எமது மக்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவம், வடக்கு கிழக்கில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளன.அபிவிருத்தி, தொல்பொருள் ஆய்வு, காடுகள் ஒதுக்கீடு, வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம் என்ற போர்வைகளில் நில ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு சமாதான முயற்சிகளோ, பொறுப்புக்கூறல் முயற்சிகளோ அல்லது நீதிக்கான முயற்சிகளோ வெற்றி அளிக்கப்போவதில்லை. இதனை சர்வதேச சமூகம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படாமல் சமாதானத்தை அடைய முடியாது, அதேபோல, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சமாதானம் அவசியம். இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று சார்ந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நில உரிமைகள் மிக முக்கியமான மனித உரிமைகள் ஆகும். எமது இந்த தாயக நிலம் எம்மிடம் இருந்து அபகரிக்கபப்டுவது என்பது எமது இனம் அழிக்கப்படுவதற்கு சமனானது. ஆகவேதான் நில அபகரிப்பு ஒரு இனப்படுகொலை ஆகின்றது.இதனால் இந்த நில மீட்பு போராட்டத்துக்கு சர்வதேச சமூகம் எல்லாவகையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Print Friendly, PDF & Email