SHARE

ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) இன்று உயிரிழந்தார். படையினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தார்.

கடந்த 20 ஆம் திகதி மதியம் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது  யாழ். பன்றிக்கோட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் படையினரின் வாகனம் இவரை மோதியது. தலையில் காயமடைந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட்டிருந்தார்.

‘ஈழநாடு’ பத்திரிகையின் தலைமை ஒப்புநோக்குநராக இருந்த இவர் பின்னர் உதவி ஆசிரியராக உயர்ந்தார். ஊடகத்துறையில் பணியாற்றிய காலத்தில் பல ஊடகவியலாளர்களை உருவாக்கினார். அவரிடம் பயிற்சி பெற்ற சிலர் இன்றும் ஊடகத்துறையின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களாக பணியாற்றுகின்றனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளராகவும் கீழைத்தேயக் கல்விக் கல்லூரியின் விரிவுரையாளராகவும், வட்டுக்கோட்டை தொகுதி தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு பதவிநிலை செயற்பாட்டாளராகவும், ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் பரீட்சை செயலாளராகவும், வெண்கரம் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார்.

பொன்னாலை சித்திவிநாயகர் ஆலயத்தின் தலைமை அர்ச்சகராகவும் அக்கோயிலின் பரிபாலகராகவும் இறுதிவரை இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவத்தை ஆரம்பித்து வருடாந்தம் அதை நடத்திவந்தார்.தமிழ், சமஸ்கிருதம், சமயம், இலக்கியம் போன்ற பல்துறை விற்பன்னரான இவர் பல நூல்களையும் எழுதி வெளியிடுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Print Friendly, PDF & Email