SHARE

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அதிகாரிகளை சாட்சியங்களை திரட்டுவதற்காக இலங்கைக்கு அனுமதிப்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் 9 பேரடங்கிய குழுவினர் சாட்சியங்களை திரட்ட இலங்கை செல்லவேண்டும் என பிரேரிக்கப்பட்டுள்ளது. அக்குழுவினருக்கு அனுமதி வழங்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அதேவேளை, மனித உரிமைகள் பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் பொருளாதார தடை விதிக்க முடியாது. மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் தனிப்பட்ட ரீதியில் பேரவையினால் சில நாடுகளுக்கு இதனை வலியுறுத்த முடியும்.

ஆனால் இவ்வாறான தடை விதிக்கப்பட வேண்டுமாயின், ஜக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிலேயே இதுதொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு சபையில் வீடோ அதிகாரத்தை கொண்ட பால நாடுகள் உண்டு. அவை எமக்கு ஆதரவு வழங்கும்.

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னும் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை. அதனையே இன்றும் வலியுறுத்துகின்றோம்.

யுத்தம் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தொடர்பாக இலங்கை பிரிட்டிஷ் தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு அதன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைத்த தகவல்கள் முரண்பாட்டை கொண்டதாக பிரபு நேஸ்பி தெளிவுபடுத்தியுள்ளார்.

6 மாத கால தகவல்களை இவர் ஆய்வு செய்து அதில் முரண்பாடு இருப்பதை வெளிப்படுத்தி இருந்தார். அமெரிக்க பிரதிநிதி ஒருவரும் இந்த அறிக்கை பக்கசார்பானது என்று அப்பொழுது குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்று அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி கேனல் ஸ்மீத்தும் இந்த முரண்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கைக்கு எதிராக அக்கால பகுதியில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய அமெரிக்காவும் அதிலிருந்து விலகிக் கொண்டது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்து சரியானவற்றை இலங்கை முன்வைப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.” – என்றார்.

Print Friendly, PDF & Email