SHARE

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.

இதனால் எமது மீனவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். போர்க் காலத்தின்போது எமது மீனவர்கள் குறுகிய கடல் பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாறான ஒரு பிரச்சினை உள்ளபோது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்திய டேலர் படகுகள் உட்பட படகுகளுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த விடயம் ஆராயப்பட வேண்டிய விடயம். வெளிப்படையாக இந்த விடயங்களை தெரிவிக்கின்றபோது தமிழ் நாட்டு மக்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும்.

தமிழ் நாட்டை பொறுத்தவரையில் எமது இனத்தின் பிரச்சினை சார்பாக பலர் தீக்குழித்து உள்ளனர். பலர் தற்கொலை செய்துள்ளனர்.

தமிழ் நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையிலே எமது இனப்பிரச்சினைக்கு அவர்களின் குரல் இன்றியமையாதது.

இந்த நிலையில் தீர்க்கப் போவதாக கூறுகின்ற இந்த சிறிய விடயங்களை கூறுகின்றபோது இரு தரப்புக்களும் கருத்துக்களையும் தெரிவிக்கின்றபோது இரு சமூகத்திற்கு இடையிலும் ஒரு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

எனவே இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email