SHARE

இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையின் விளைவாகவே,  அமெரிக்க காங்கிரசில், இலங்கை குறித்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக போரின் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை தீர்வு உட்பட இனநல்லிக்கணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குதல் என்று பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன.

அதேநேரம், விசேடமாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி விகித்தபோது இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பேன் என்று கூறியிருந்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டில் நிரந்தமான சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்கான விருப்பத்தினை வெளியிட்டிருந்தார். ஆகவே ராஜபக்ஷ சகோதரர்கள் இருவருமே உள்நாட்டிலும்,சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள்.

ஆனால் அவர்கள் அதனை நடைமுறையில் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கரிசனைகளை கொண்டிருக்கவில்லை. அதேநேரம், ஜனநாயகத்திற்கு முரணான கருமங்களை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள். இதனால் நாட்டின் ஸ்திரமற்ற நிலைமை நீடிக்கின்றது.

இவ்வாறான நிலையில் தான் அமெரிக்கா காங்கிரஸால் இலங்கை பற்றிய முன் கூட்டத் தீர்மானம் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அடுத்தகட்டமாக வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்றபோது இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிருந்து விலகி நிற்க முடியாத நிலைமைகள் தீவிரமடையும்.

அரசாங்கம் இதுகாலவரையிலும் முன்னெடுத்த செயற்பாடுகளை கைவிட்டு உடனடியாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு இல்லையேல் இதுபோன்ற பல விடயங்களுக்கு சர்வதேச ரீதியாக முகங்கொடுக்க நேரிடும். அடுத்துவரும்காலங்களில் இவ்விதமான பல காரியங்கள் நிகழலாம் என்றார்.

Print Friendly, PDF & Email