SHARE

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரியா – நடேஸ் குடும்பம் நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியமர்த்தப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குடும்பத்தை எங்கே குடியமர்த்துவது என்பது தொடர்பில் உள்துறை அமைச்சர் Karen Andrews-இன் அலுவலகம் ஆராய்ந்துவருவதாகவும், ஆனால் இவர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்துவது தொடர்பில் ஆராயப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார்.

Nine Radio-வுக்கு வழங்கிய நேர்காணலில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் Marise Payne, குறித்த குடும்பத்தை அமெரிக்காவில் அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் ஆராயப்படுவதாக கூறினார்.

இதற்கு மேலதிகமாக எவ்வித தகவல்களையும் வழங்குவதற்கு அமைச்சர் Marise Payne மறுத்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதென்பது ‘ஆஸ்திரேலிய தடுப்புமுகாம்களில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் அனைவருக்கும் பொருந்தும்'(தகுதிபெற்றவர்கள் மட்டும்) என உள்துறை அமைச்சர் Karen Andrews வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கே முன்னுரிமையளிக்கப்படுவதாகவும், நியூசிலாந்து இரண்டாவது தெரிவாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரியா-நடேஸின் இரண்டாவது மகள் தருணிகா மருத்துவசிகிச்சைக்காக பெர்த்திற்கு அழைத்துவரப்பட்டுள்ள பின்னணியில் தமது குடும்பத்தை குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ அனுமதிக்குமாறு பிரியா வேண்டுகோள் விடுத்த சிலமணிநேரங்களில் அமைச்சர் Marise Payne-இன் கருத்து வெளியாகியுள்ளது.

தருணிகாவுக்கு குருதித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால் மேலதிக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர் பெர்த் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தார்.

கிறிஸ்மஸ் தீவில் கடந்த பத்து நாட்களாக தருணிகா கடும் காய்ச்சல்,வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் இதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்கு கிறிஸ்மஸ் தீவு மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் பெர்த்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

பிரியா- நடேஸ் தம்பதி மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோரது தடுப்புமுகாம் வாழ்க்கை கடந்த மார்ச் மாதத்துடன் மூன்று ஆண்டுகளை எட்டியிருந்தது.

குறிப்பாக 3 வயதான தருணிகா தனது வாழ்க்கை முழுவதையும் தடுப்பு முகாமிலேயே கழித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இவ்வளவு நீண்டநாட்கள் தடுப்புமுகாமிலிருக்கும் குழந்தையாக தருணிகா உள்ளார் என குறிப்பிடப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.

Print Friendly, PDF & Email