SHARE

யாழ்.பருத்தித்துறை – கரணவாய் மேற்கில் நடைபெற்ற இரகசிய திருமண நிகழ்வுக்குள் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் நுழைந்த நிலையில் மணமக்கள் உள்ளிட்ட சுமார் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,  திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் தேடி வருவதுடன் அவர்களையும் தனிமைப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தொியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,  பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் நேற்றையதினம் ஞாயிற்றுகிழமை பருத்தித்துறை கரணவாய் மேற்கில் உள்ள மணப்பெண் வீட்டில், சுகாதார பிரிவின் அனுமதியின்றி திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கட்டுவனை சேர்ந்த மணமகன் குடும்பம் மற்றும் உறவினர்கள் மணப்பெண் வீட்டிற்கு சென்று திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் இரு வீட்டாருமாக 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து  வீட்டிற்கு பொலிஸார் சென்ற போது திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த உறவினர்கள் பலரும் தப்பி ஓடி இருந்தனர். மணமக்கள் வீட்டார், குருக்கள், புகைப்பட பிடிப்பாளர்கள் உள்ளிட்ட சிலரை பொலிஸார் மடக்கி வைத்திருந்தனர்.

அத்துடன் அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு தகவல் அளித்தனர்.அங்கு வந்திருந்த சுகாதார பிரிவினர் மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அத்துடன் புகைப்படப்பிடிப்பாளர்களிடம் இருந்து புகைப்படம் மற்றும் காணொளிகளை பெற்று நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Print Friendly, PDF & Email