SHARE

– சட்டத்தரணி சுகாஸ்

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு  சர்வதேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையைப் பொறுத்த வரை பயங்கர வாதத் தடைச் சட்டம் என்பது ஒரு குழப்பகரமான வியாக்கியானங்களைக் கொண்ட ஒரு சட்ட ஏற்பாடாகவே காணப்படுகின்றது.

இலங்கை அரசினுடைய அரசியல் கொள்கைகளுக்கு மாறான நிலைப்பாடுகளை கொண்டிருந்தவர்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான கருவியாகத்தான் இந்த பயங்கரவாத தடை சட்டத்தை பார்க்க முடிகிறது.

ஏனென்றால், இலங்கையிலே நடைபெற்றது ஒரு பயங்கரவாதம் கிடையாது. அது ஒரு இனம், தன்னுடைய விடுதலையை வலியுறுத்தி சர்வதேச சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் விடுதலைக்காக செயல்படுவது பயங்கரவாதம் ஆகாது.

அந்தவகையில் இலங்கையிலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், அவர்கள் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு மன்றங்களின் ஊடாக வழங்கப்படுகின்ற அழுத்தங்களின் மூலம்  இதனை நீக்குவதுதான் ஒரே தீர்வு.

ஆகவே, இந்தப் பயங்கர வாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்று பட்டு குரல் கொடுப்பது மட்டும் தீர்வைத் தராது. அதையும் தாண்டி சர்வதேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது’ எனத் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email