SHARE

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் மர்மமான முறையில் தீப்பற்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுத்த மூத்த பொலிஸ் அதிகாரி தொடர்பான விரிவான விசாரணையை பொலிஸ் திணைக்களம் தொடங்கியுள்ளது. அவர் கைதாகவும் வாய்ப்புள்ளதாக சிங்கள ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மூத்த அதிகாரி, சிறுமியின் உறவினர்களை சந்தித்து, “அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் மிக முக்கியமான நபர்கள்” என்று கூறினார். “அவர்கள் இது போன்ற செயல்களைச் செய்வதில்லை. இந்த விவகாரத்தை தொடர்ந்து இழுக்க வேண்டிய அவசியமில்லை. இதை காவல்துறைக்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை. ஐம்பதாயிரம் ரூபாயைப் பெற்று இதை முடித்துக் கொள்வோம். இது ஒரு சாதாரண தற்கொலை. அதை இழுத்துச் செல்ல வேண்டாம் என்று அந்த அதிகாரி ஹிஷாலியின் சகோதரர்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹிஷாலியின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரர்கள் உட்பட நெருங்கிய உறவினர்கள்  பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலங்களில் இந்த அதிகாரி கொடுத்த அழுத்தம் பற்றிய தகவல்கள் தெரியவந்தது.

பின்னர், அதிகாரியைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்பு பொலிஸ் குழு விசாரணையைத் தொடங்கியது. அந்த அதிகாரி பொலிஸ் தலைமையகத்தில் பணியில் இருந்த மூத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் என்பது தெரியவந்தது என செய்தி வெளியிட்டுள்ள சிங்கள ஊடகங்கள், முஸ்லிம் பொலிஸ் அதிகாரியொருவரின் பெயரை இந்த விவகாரத்தில் இணைத்து செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகாரியின் தொலைபேசி பதிவுகளின் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் விசாரிக்கப்படுவார் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அதிகாரி ரிஷாத் பதியுதீனின் முன்னாள் பாதுகாவலர். அவர் பதியுதீன் குடும்பத்தின் நெருங்கிய நண்பர்.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் ஹிஷாலினி தீயில் எரிந்ததும், பதியுதீனின் மனைவியின் தந்தை, அந்த பொலிஸ் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்தார்.

பொலிஸ் அதிகாரி உடனே பதியுதீனின் வீட்டுக்குச் சென்று அந்த நேரத்தில் அங்கிருந்த ஹிஷாலியின் உறவினர்களைச் சந்தித்து சம்பவத்தை மறைக்க அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தது தெரியவந்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகளை மிரட்டுவது மற்றும் இலஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் அந்த பொலிஸ் அதிகாரியை கைது செய்ய விசாரணை நடந்து வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Print Friendly, PDF & Email