SHARE

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர்களையும் தாக்குதல் நடத்தியவர்களையும் தமக்கு தெரியாது என்றும் அவர்கள் வேறுபகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.  ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் அவர்களை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் துரத்தி வந்த நால்வர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூவரில் ஒருவரின் கால்கள் இரண்டும் கடுமையாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் குருநகர் பொலிஸ் நிலையத்திற்று தகவலளிக்கப்பட்ட போதும் சுமார் ஒரு மணிநேரமாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு பொலிஸாரும் முப்படையினரும் வீதிகளில் பணிகளில் ஈடுபடும் வேளையில் வன்முறைக் கும்பல் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

Print Friendly, PDF & Email