SHARE

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவில் மற்றுமொரு உயர்மட்ட இராஜதந்திர சந்திப்பு ஒன்று இன்று (15/10/2021) மதியம் நடைபெற்றுள்ளது.

பிரித்தானியாவின் கரோ மத்திய (Harrow Central) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய ஹரத் தோமஸ் (Hon. Gareth Thomas MP) அவர்களுடனேயே இந்த சந்திப்பு மெய்நிகர்வழி (Zoom) ஊடக இடம்பெற்றுள்ளது. சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ஐ.நா. நிபுணரான யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் (ITJP) இயக்குனரான பிரான்சிஸ் கரிசன் (Francis Harrison), இனப்படுகொலையை சர்வதேச நீதிமன்றிற்கு (ICC) எடுத்துச்செல்லும் வழக்கினை முன்னெடுத்துவரும் மூத்த வழக்கறிஞர் திரு அருண் கணநாதன், தொழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் (Tamils for Labour) பணிப்பாளர் திரு சென் கந்தையா அவர்கள் மற்றும் நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகிய திரு சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வாவினை தடை செய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைப்பு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய தருணம் வந்துள்ளதை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள் கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடி சாட்சி என்றும் தெரிவித்தார்.

பிரான்சிஸ் கரிசன் அவர்கள் இலங்கையில் தொடரும் சித்திரவதையை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதோடு, ஏனைய யுத்த குற்றவாளிகளுக்கு எதிராக ஆவணலகளை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் 20 October 2021 ஆரம்பிக்கப்படவுள்ள மக்கன்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் இணையும் படியும் கேட்டுக்கொண்டார். அருண் கணநாதன் மற்றும் சென் கந்தையா அவர்கள் சவேந்திர சில்வாவை தடைசெய்வது பற்றி ஒரு விவாதத்தை பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், அதற்கு ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொண்டனர்.

மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும்  மற்றும் நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்களுமான பொன்னையா யோகராஜா, சதீஷ் குலசேகரம், ஶ்ரீ அபிராமி ஶ்ரீ பாலேஸ்வரன், அரவிந்தராஐ் நல்லதம்பி, வசிதரன் சதாசிவம், கௌசிகன் சசிகுமார், ஜனுஷ்டன் நவரத்தினம், ஜனகன் கணேஷ், றஜூவன் பவளகாந்தன், ரஞ்சினி யோகராஜா,சாதந்லோயிற்றன் புயலேந்திரன் மற்றும் குமார்சஞ்சிக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு தங்கள் சித்திரவதை அனுபவர்களை பாராளுமன்ற உறுப்பினருடன்பகிர்ந்து கொண்டு, பிரித்தானியா தமிழருக்கு  நியாயம் பெற்றுத்தரும் முயற்சியில் தமது உண்மையான ஈடுபாட்டு நிரூபிக்கஇந்த சிறிய ஆனால் முக்கிய படி உதவும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன், தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.அதேவேளை, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்கட்சியின் மற்றய பாராளுமன்ற உறுப்பினர்களான சிவேன் மக்டோனாமற்றும் ஏனையவர்க்ளுடன் மேலும் இது தொடர்பில் கலந்துரையாடி குறித்த விடயத்தினை பாராளுமன்ற விவாதத்திற்கு அனுமதி பெற முயற்சிகளை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளையோர் இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்ததுடன் அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email