SHARE

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. தேயிலை, இறப்பர், தெங்கு போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் காணப்பட்ட கிராக்கி தற்பொழுது கிடையாது.

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email