பிரித்தானிய இராஜாங்க அமைச்சருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கடிதம்
ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பசுபிக் நாடுகள் மற்றும் பொது நலவாய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் லோர்ட் அஹமட் இலங்கைக்கான தனது விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இலங்கை ஜனாதிபதி உட்பட அரச தலைவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாஇ ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் எமது பகிரப்பட்ட நலன்களைப் பற்றி கலந்துரையாடவும் எதிர்கால வாய்ப்புகளை ஆராயவும் இந்த வாரம் நான் இலங்கைக்கு விஜயம் செய்கிறேன். கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் உள்ள அனைத்து சமூக மக்களையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என இலங்கைக்கான தனது விஜயம் குறித்து பிரித்தானிய அமைச்சர் லோர்ட் அஹமட் குறிப்பிட்டுள்ளதாக அவரின் விஜயத்தின் நிகழ்ச்சிநிரலை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்நிலையிலேயே மேற்படி நாளிதழின் செய்தியை மேற்கோள் காட்டி காணாமல் ஆக்கப்பட்டவரி;களின் உறவுகள் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இராஜாங்க அமைச்சர் லோர்ட் அஹமட்டிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கைக்கான விஜயம் குறித்து ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையில் உங்களின் முன்னுரிமை என்பது ஒரு மாநிலத்துடனான ஈடுபாடு என்பது தெளிவாகிறது. இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை குறித்து நீங்கள் எந்த கட்டத்திலும் குறிப்பிடவில்லை. 2009 ஆம் ஆண்டு போரின் போது எமது அன்புக்குரியவர்களை இராணுவத்தினரிடம் பறிகொடுத்து இன்று வரை அவர்களை தேடி அலைகின்றோம். கடந்த 13 ஆண்டுகளாக அவர்கள் குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
எனவே, உங்களின் இந்த விஜயத்தின் போது போரின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி உட்பட அரச தலைவர்களிடம் எங்களின் உறவுகளின் நிலை குறித்து கேள்வி எழுப்புமாறு கோருகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Letter-to-Lord-Ahmed-1