SHARE

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, சிறிலங்கா அரசாங்கமோ ஆர்வம்

காட்டாததால் தான் தாம், ஆளும்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்ததாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியுயோர்க் சென்ற ரவூப் ஹக்கீம், அங்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போதே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைத்ததற்கு நியாயம் கற்பித்துள்ளார்.

“மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வின் அவசியத்தையும், இனப்பிரச்சினைத் தீர்வின் முக்கியத்துவத்தையும் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

மாகாணசபைத் தேர்தல் முடிந்தவுடன் நாம் சிறிலங்கா அரச தரப்பினருடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் நடத்திய பேச்சுக்களின் போது , தேசிய அரசாங்கத்தை அமைக்க வலியுறுத்திய போதிலும், இருதரப்பினரும் அதில் அக்கறை காட்டவில்லை.

இந்தநிலையிலேயே தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமைக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்க முன்வந்தோம்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்வாங்கினால், இதுவரை தீர்வு காணப்படாத பல்வேறு பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்த முடியும்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான எத்தகைய பேச்சுக்களிலும் முஸ்லிம்களும் தனித்தரப்பாக பங்கேற்ற வேண்டும்.

விடுதலைப் புலிகளைப் போன்றே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சுக்களில் முஸ்லிம்களைத் தனித்தரப்பாக ஏற்க மறுக்கின்றது.

சிறிலங்கா அரசுடன் தாம் பேச்சுக்களில் ஈடுபடுவதாகவும், முஸ்லிம்கள் தம்மோடு பிரச்சினைகள் குறித்து பேசலாம் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.“ என்றும் ரவூப் ஹக்கீம், அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக்கிடம் கூறியுள்ளார்.

கிழக்கில் தமிழர் ஒருவரை முதல்வராக்கும் அமெரிக்காவின் முயற்சியை தாம் சிறிலங்கா அரசுடன் இணைந்து முறியடித்திருந்ததாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் கடந்தவாரம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

இதற்காகவே தேர்தல் முடிந்ததும், பிளேக் கொழும்பு வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email