SHARE

போர் முடிந்து மூன்றாண்டுகளாகி விட்ட நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சை வேறு எவரிடமாவது ஒப்படைத்து விடவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார் ஊவா மாகாண முதல்வர் சசீந்திர ராஜபக்ச.

சிறிலங்கா அதிபரின் மூத்த சகோதரரும், சபாநாயகருமான சமல் ராஜபக்சவின் மகனான சசீந்திர ராஜபக்ச, வெலிமடவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோதே, பகிரங்கமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முக்கியமான இந்தத் தருணத்தில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கல்வி, உயர்கல்வி அமைச்சை தன்வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“இப்போது போர் முடிந்து விட்டது. பெரும்பாலான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் மேலும் துறைமுகங்களை அமைப்பதற்கும் இடமில்லை.

எனவே, பாதுகாப்பு அமைச்சு, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சை வேறு எவரிடமாகவது ஒப்படைத்து விட்டு கல்வி சம்பந்தமான அமைச்சுக்களை அவர் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கல்வி சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல, ஆறு தடவைகள் யோசிக்க வேண்டும்.

ஏனென்றால் அந்தமுடிவு அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

இப்போது பெரும்பாலான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு விட்ட நிலையில், அதில் ஏன் நேரத்தை செலவிடவேண்டும்?

இன்னொரு பக்கத்தில் வேறு துறைமுகங்களை அமைப்பதற்கும் நாட்டில் இடமில்லை.

இந்த அமைச்சுக்களை வைத்துக் கொண்டிருக்காமல், கல்வி அமைச்சின் மீது சிறிலங்கா அதிபர் கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் அவர் மேலும் ஆலோசனை கூறியுள்ளார்.

Print Friendly, PDF & Email