SHARE

இலங்கைத் தமிழர்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு பெருமுயற்சி எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா உறுதியளித்துள்ளது.

இந்தியப் பயணம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, பொன் செல்வராசா மற்றும் சுமந்திரன் ஆகியோர் இந்தியாவுக்கு நான்கு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டனர்.

கடந்த 10ம் நாள் புதுடெல்லி சென்ற இந்தக்குழு இன்று நாடு திரும்பியுள்ளது.

இந்தப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் – இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, எதிர்க்கட்சி தலைவி சுஸ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார அமைச்சின் செயலர் ரஞ்சன் மத்தாய், வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலர் சிறிங்லா மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

பிரதமர் மன்மோகன் சிங்கை இந்தக் குழுவினர் சந்தித்தபோது, தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கும், வாழ்வை புதுப்பிப்பதற்கும் இந்திய அரசாங்கம் வழங்கி வருகின்ற உதவிகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாக கூறினர்.

இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முறைப்படி நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சிறிலங்கா மக்களுக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும், தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென்றும் சிறிலங்கா அதிபரையும் அரசாங்கத்தையும் இந்திய அரசு வலியுறுத்தி வருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆக்கபூர்வப்படுத்துவதில் சிறிலங்கா அரசு காட்டிவருகின்ற அசமந்தப் போக்கிற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசில் தீர்வொன்றை வழங்குவதில் சிறிலங்கா அரசு காட்டிவருகின்ற பின்னடிப்பிற்கும் தாங்கள் பெரிதும் மனம் வருந்துவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர் – இந்திய உயரதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

மேற்படி விடயங்களில் எந்தவித அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்காமல் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுயமரியாதையுடன் எதிர்காலத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வது கேள்விக்குறியானது என உணர்வதாகவும், எனவே இந்த விடயம் தொடர்பாக இந்திய அரசு கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய உயர்மட்டக் குழுவுடனான பேச்சுக்கள் சுதந்திரமாக நடைபெற்றன.

எதிர்காலத்தில் இலங்கை தமிழர்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு பெருமுயற்சி எடுக்கும் என்று உறுதியளித்துள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email