SHARE

ind_origin_nurse001செவிலியர் பணியில் மோசமான நடத்தை குறித்து, மேலதிகாரி விமர்சித்ததால், அவருக்கு காப்பியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக, இந்திய வம்சாவளியைச் சார்ந்த பெண் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பெட்போர்ட்ஷயர், ஷெப்போர்டில் உள்ள ஷம்ஸ் மூப்பன் பல் மருத்துவமனையில் ரவீந்தர் கவுர் துணை செவிலியராகப் பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் துடிப்புடன் செயல்பட்ட அவர், நாட்கள் செல்லச் செல்ல மற்ற பணியாளர்களுடன் ஒத்துழைக்கவில்லை.

சென்ற வருடம், ஜனவரி மாதம் பணியில் இருந்த சக ஊழியர்களை நியாமற்ற முறையில் உத்தரவிட்டதற்காக எச்சரித்து விடப்பட்டார். மறுபடியும் மார்ச் 13ஆம் திகதியன்று, அவருடைய மேலதிகாரி லாரா நவுல்ஸ், அவரை அழைத்து, மறுபடியும் மோசமான நடத்தை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

சில தினங்கள் சென்றபின், மேலதிகாரிக்கு காப்பி போடும் பணி கவுருக்கு அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து, கவுர் எடுத்துவந்த காப்பியைக் குடித்த லாரா, சுவை சரியில்லை என்று எண்ணி, மீதியை கை கழுவும் தொட்டியில் கொட்டியுள்ளார். அப்போது, அதிலிருந்து சாம்பல்நிற உருண்டைபோல் தொட்டியில் படிந்ததையும் அவர் பார்த்துள்ளார்.

பின்னர், பணிக்குத் திரும்பிய லாராவிற்கு சிறிது நேரத்திலேயே, வயிற்று உபாதைகளும் உடல்நலக்குறைவும் ஏற்பட்டன. அவரது வயிற்றில் படம் பிடிக்கப்பட்டபோது, கலந்திருந்த படிமமும், கைகழுவும் தொட்டியில் காணப்பட்ட படிமமும், பாதரச ரசக்கலவை வகையினைச் சார்ந்தது என உறுதி செய்யப்பட்டது.

ரவீந்தர் கவுர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பல் சிகிச்சைக்கு உதவும் பாதரசக் கலவை தயாரிப்பது குறித்து, கவுருக்குத் தெரியும் என்பது நீதிமன்றத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆயினும், தன்னைப் பற்றிய புகார்கள் மேலதிகாரிகளுக்கு சென்றுள்ளதால், அவர்கள் தனக்கு இப்படி ஒரு பிரச்சினையைக் கிளப்புகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email