தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் அடக்கு முறைக்கு எதிரான தலைவருமான மு.தம்பிராஜாவின் மகனான திருவளவன் தம்பிராஜா கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை யாழ். பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
யாழ். கந்தப்ப சேகரம் வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இருந்த சமயமே அவரது மகனான திருவளவன் தம்பிராஜா (19) காணாமல் போயுள்ளார்.
பிற்பகல் 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட வேளையிலேயே இவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தம்பிராஜா தெரிவிக்கையில்
எனது மகன் அண்மையிலேயே லண்டனில் இருந்து இங்கு வந்திருந்தார். அவரை நான் எனது அலுவலகத்தில் விட்டுவிட்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் பொருட்டு வெ ளியில் சென்றிருந்தேன். மகன் தனிமையிலேயே அலுவலகத்தில் இருந்தார். நான் 3 மணியளவில் அலுவலகத்துக்கு வந்து பார்க்கையில் அவரைக் காணவில்லை. அவரது கைக்கடிகாரம் கையடக்கத் தொலைபேசி மடிக்கணனி என்பன அங்கேயே காணப்பட்டன. இதனால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். இந்நிலையில் 7 மணிவரை தேடிப்பார்த்து விட்டுப் பின்னர் யாழ். பொலிஸாரிடம் முறையிட்டேன்.
தனது மகன் மிகவும் அப்பாவி அவருக்கு யாழ். நிலைமைகள் தொடர்பில் எதுவும் தெரியாது. அவர் தனது கல்வி நடவடிக்கைகளைத் தொடரவே இங்கு வந்திருந்தார். இதனால் எனது மனைவியும் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளார். எனவே அவரை யாராவது கடத்தியிருந்தால் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருகின்றேன் எனத் தெரிவித்தார்.
மேலும் எனது அரசியல் எதிரிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். சந்தேகத்திற்கிடமான மூவரின் பெயர்களையும் யாழ். பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்தக் கடத்தல் தொடர்பில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகின்றது.