எமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு
பல இடங் களிலும் முறையிட்டு விட்டோம். ஆனால் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்கு-ழுவின் விசாரணைகள் சாவகச்சேரி பிரதேச
செயலர் பிரிவில் நேற்றைய தினம் இடம்பெற்றபோதே தமது உறவுகளை தொலைத்து விட்டு தவிக்கும் மக்கள், ஆணைக்குழு அதிகாரி களிடம் இந்த கோரிக்கையை விடுத்தனர்.
இந்த விசாரணை அமர்வில் சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான ஸ்ரீஸ்வரி புஸ்பராசா என்ற தாய் சாட்சியமளிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வினை அடுத்து வன்னி நோக்கி நாம் குடும்பத்துடன் இடம்பெயர்ந்திருந்தோம். இந்நிலையில் காணாமல்போன புஸ்பராசா அஜிந்தன் (வயது 18) என்ற எனது மகன் மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்தார்.
இதன்போது 2008 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி விடுதலைப்புலிகள் எனது மகனை பிடித்துச் சென்றிருந்தனர். இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் மீண்டும் எம்மிடம் தப்பித்து வந்திருந்தார். இதனையடுத்து இரண்டாவது தடவையும் விடுதலைப்புலிகளால் எனது மகன் பிடித்துச் செல்லப்பட்டு மீண்டும் தப்பித்து வந்த நிலையில் உறவினர் வீட்டில் சுமார் ஒரு வருடம் அவரை மறைத்து வைத்திருந்தோம். எனினும் மூன்றாம் தடவையாகவும் விடுதலைப்புலிகள் எனது மகனை கைது செய்திருந்தனர் . இந்நிலையில் அவர்களிடமிருந்து மீண்டும் தப்பித்து வந்த எனது மகனை முள்ளியவளை புதுமாத்தளன் பகுதியில் 200-9ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இறுதியாகக் கண்டிருந்தோம். அதன்போது அவருடன் கதைப்பதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நாம் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பின்னர் எமது உறவினர் ஒருவர், 2009 மே மாதம் புதுமாத்தளன் பகுதியில் எனது மகனை இராணுவம் பிடித்து வைத்திருந்ததை கண்டதாகத் தெரிவித்திருந்தார்.
2013, 2014 ஆண்டுகளில் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் எனது மகனுடன் பலர் நிலத்தில் இருத்தி வைக்கப்பபட்டுள்ளதுடன் சுற்றிவர இராணுவத்தினர் நிற்பதாக புகைப்படம் ஒன்று பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த பத்திரிகையின் ஆதாரத்தோடு எனது மகனை மீட்டுத்தருமாறு மனித உரிமை ஆணையகத்திலும் வேறு பல இடங்களிலும் முறையிட்டிருந்தேன்.
எனினும் இதுவரை எந்தப் பதிலும் எமக்குக் கிடைக்கப்பெறவில்லை. தயவு செய்து எனது மகனை திருப்பித் தாருங்கள். எனது மகன் உயிருடனேயே உள்ளார் என குறித்த தாயார் சாட்சியமளித்திருந்தார்.
சிவில் காரியாலயத்தில் வைத்து எனது மகன் காணாமல்போயுள்ளார்
இதேவேளை கையெழுத்து வைக்கப்படவேண்டுமென இராணுவத்தால் கொடிகாமம் சிவில் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்ட மகன் காணாமல்போயுள்ளதாகவும் இதன் பின்னனியில் தமது ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் செயற்பட்டுள்ளதாகவும் எழுதுமட்டுவாள் தெற்குப் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பரிமளம் எனும் தாய சாட்சியமளித்தார்.
2008 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி காணாமல்போன கந்தசாமி ஹரிகரன் (வயது 18) என்ற தனது மகன் தொடர்பில் ஆணைக்குழு முன்னிலையில் மேலும் சாட்சியமளிக்கையில்
என்னுடைய மகனை விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்தவர் எனக்கூறி கொடிகாமம் இராணுவ சிவில் காரியாலயத்திற்கு வந்து கையெழுத்து இடுமாறு அழைக்கப்பட்டடிருந்தார்.
இதன் போது அவரை அழைத்துக் கொண்டு நானும் ஆரம்பத்தில் சென்றிருந்தேன். பின்னர் என்னை அங்கு வரவேண்டாம் எனவும் மகனைமட்டும் அனுப்பி வைத்தால் போதும் என அங்கிருந்த இராணுவ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்திருந்தனர். கையெழுத்து இடுவதற்கு மட்டுமே என எண்ணி கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி தனியாக எனது மகனை அனுப்பி வைத்திருந்த நிலையில் அவர் அன்றைய தினம் வீட்டுக்குத் திரும்பவில்லை.
இந்நிலையில் அவர் அங்குள்ள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன். எனது மகனின் கைதின் பின்னனியில் எமது ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் செயற்பட்டுள்ளமை தெரியவந்தது. எனினும் அவர் தற்போது எமது ஊரில் இல்லை. எங்குசென்றார் என்பதும் தெரியாது.
அத்துடன் குறித்த சிவில் காரியாலயத்தில் குமார, நரையன் என இரண்டு இராணுவ அதிகாரிகளையும் எனக்குத் தெரியும் எனத் தெரிவித்தார்.
மேலும் தனது மகன் சாவகச்சேரி சரசாலைப் பகுதியிலேயே தற்போதும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை அங்கிருந்து மீட்டுத் தருமாறும் குறித்த ஆணைக்குழு அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கோவிலில் தங்கி நின்ற மகன்களை இராணுவமே பிடித்துச் சென்றது
கொடிகாமம் இராமச்சந்திரன் செல்லம்மா என்ற தாய் சாட்சியமளிக்கையில்,
இராமச்சந்திரன் இராசகுமார் (வயது 24) என்ற எனது மகன் கோவிலில் இரவுவேலைக்காக தங்கி நின்றுள்ளார். இதன்போது அங்கு சென்ற இராணுவத்தினர் அவர்களைப் பிடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து வரணி இராணுவ முகாமிற்கு சென்ற நாம் எமது பிள்ளைகளை விடுவிக்குமாறு கோரியிருந்தோம். இதன்போது எமது பிள்ளைகளை தாங்கள் பிடிக்கவில்லை எனவும் இப்பகுதிக்குள் மீண்டும் மீண்டும் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என வும் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து நாம் பொலிஸிலும் முறைப்பாடு செய்திருந்தோம். அவர்களும் இடையிடையே விசாரணை என எம்மோடு வந்து கலந்துரையாடிவிட்டுச் செல்வார்கள்.
எனினும் காணாமல்போன எனது மகன் உட்பட எட்டுப்பேர் தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.
மல்லிகா தேவி என்ற தாய் காணாமல் போன சிவானந்தம் (வயது 24) என்ற மகன் தொடர்பில் சாட்சியளிக்கையில்,
காணாமல் போன தன்னுடைய மகனின் பெயர் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ளதாகவும் அவரை கடத்தியவர்கள் தற்போது வரை உயிருடனேயே வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து மந்துவில் வடக்கைச் சேர்ந்த கந்தசாமி லோகநாயகி என்ற தாய் காணாமல்போன கந்தசாமி பரிமேலழகர் (வயது 29) என்ற மகன் தொடர்பில் சாட்சியம் அளிக்கையில்
என்னுடைய மகன் கோவிலில் நின்றிருந்த அன்று இரவுவேளை பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. இதனையடுத்து அதிகாலை எனது மகனைத் தோடி குறித்த கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு எனது மகன் உட்பட எட்டுப்பேரின் கைகளும் வயர்களினால் கட்டப்பட்டிருந்தன. இதன்போது அங்குவந்த “பவல்” வாகனத்திற்குள் இராணுவத்தினரால் எமது பிள்ளைகள் தூக்கிப் எறியப்பட்டதையடுத்து வரணியை நோக்கி பவல் வாகனம் சென்றதாக கண்ணீர்மல்க சாட்சியமளித்திருந்தார்.
source: http://www.virakesari.lk/article/3725