நீண்டகாலமாக விசாரணைகளின்றி மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான நிலையில் அவர்களின் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின்
விடுதலையை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாண பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்று கைதிகளின் விடுதலைக்கு ஒன்றுபட்டு குரலெழுப்புமாறு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகுஜன அமைப்பு கோரியுள்ளது.