பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
நீண்டகால இடைவெளியின் பின் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இலங்கை தூதரகத்தின் முன்னிருந்து பொதுநலவாய அலுவலகம் வரை மாபெரும் பேரணியாக கலந்து கொண்டனர்.
இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியா வாழ் தமிழரகளால் பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ உடையிலிருந்த தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தோரை பார்த்து கழுத்தை வேட்டுவேன் என்ற சைகையினூடு கொலைமிரட்டல் விடுத்திருந்தார்.
குறித்த காணொளி ஊடகங்கள் மற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதினையடுத்து உலகத்தமிழரிடையேயும் சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறித்த அதிகாரியை பணிநிறுத்தம் செய்தது. எனினும் இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அவரது பணிநீக்கம் இரத்து செய்யப்பட்டு தொடர்ந்தும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த அதிகாரியை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற ஒருமித்த கோரிக்கையுடன் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்துதரகத்தின் முன் ஒன்று திரண்ட பல்வேறு தழிழர் அமைப்புக்கள் கெமன்வெல்த் அலுவலகம் வரையான மாபெரும் நடைபவணி பேரணியில் ஈடுபட்டனர்.
தமிழீழ தேசியத்தலைவரின் திருவுருவப்படத்தினை தாங்கியபடி பெரும்திரளானோர் அணிவகுக்க இராணுவ அதிகாரிக்கு எதிரான கோசங்களுடன் பேரணி நடைபெற்றது.