SHARE

அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கருணை மனுக்களை அனுப்புவதற்கு வடக்குக் கிழக்கிலுள்ள பொது அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியற் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை கருணை மனுக்கள் அனுப்புவதன் மூலம் விரைவுபடுத்த முடியும் என்ற சட்டவல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழ் இளைஞர் சமூகத்தினால் வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்களிடம் கருணை மனுக்கள் சேகரிக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பும் செயற்திட்டம் இன்று காலை கிளிநொச்சி விஸ்வமடுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்திட்டத்திற்கு தமிழர் தாயகப் பிரதேசங்களான கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்திட்டமானது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கருணை மனுக்கள், பொது அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள் என வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து அமைப்புக்களுக்கும் நேரடியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர், கையெழுத்து இடப்பட்ட பின்னர் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இந்தச் செயற்திட்டத்திற்கு அரசியல் பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email