SHARE

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)

நல்லாட்சி அரசாங்கத்திற்கு சித்திரை மாதம் 2 ஆம் திகதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளோம். 2015ம் ஆண்டு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையை எதிர்காலத்திலாவது செயற்படுத்துவதற்கான சமிக்ஞைகள் சித்திரை 2ம் திகதிக்குள் எமக்கு கிடைக்கவேண்டும். கிடைத்தால் மட்டுமே இந்த ஆட்சி தொடர்வதற்கு எங்களால் முடிந்தளவு முயற்சிப்போம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பதென தீர்மானிப்பதற்காக சித்திரை மாதம் எமது நாடாளுமன்ற குழு கூடவுள்ளது. அதற்கு முன்னர் தொடர்ச்சியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்.

இந்த பேச்சுவார்த்தையின்போது 2015ம் ஆண்டு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையை இனிமேலாவது நிறைவேற்றவேண்டும் என கூறுவோம். இதனடிப்படையில் இனிமேலாவது மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக இந்த அரசாங்கம் நடந்து கொள்ளும் சமிக்ஞையை காண்பித்தால் இந்த அரசாங்கம் தொடர்வதற்கு எங்களால் இயன்ற சகல முயற்சிகளையும் எடுப்போம்.

மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என்பது பொது எதிரணியின் முதலாவது காய் நகர்த்தலாகும். இதன் பின்னர் ஜனாதிபதிக்கும் இது நடக்கும். அதனை நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம். இந்நிலையில் இந்த அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்க பணியை தொடங்கியிருந்தது. அந்த முயற்சி இப்போது இடைக்கட்டத்தில் நிற்கிறது. தொடர்ந்து நடக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இவ்வாறான ஒரு கட்டத்தில் இந்த கூட்டரசாங்கம் விழுந்தால் ஒன்றுமே நடக்காமல்போகும். ஆகவேதான் நான் முன்னர் கூறியதைபோல் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பொறுப்புகூறல் போன்ற விடயங்களில் அரசு இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான சமிக்ஞைகளை காண்பித்தால் இந்த அரசாங்கம் தொடர்வதற்காக எங்களால் முடிந்தளவு முயற்சிகளை செய்வோம். இல்லையேல் சித்திரை மாதம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் என்றார்.

Print Friendly, PDF & Email